அகமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு இடையே பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் செய்த செயல் ஒன்றால் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எரிச்சல் அடைந்தனர்.
எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என சீன் போட்ட ரிஸ்வானை, அகமதாபாத்தில் மைதானத்தில் கூடி இருந்த 1 லட்சம் ரசிகர்கள் முன் அவரைக் குத்திக் காட்டி அவமானப்படுத்தி விட்டார் விராட் கோலி.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 12.3 ஓவரில் தன் இரண்டாவது விக்கெட்டை இழந்தது.
பாபர் அசாம் களத்தில் இருந்த நிலையில், அடுத்து முகமது ரிஸ்வான் பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும். ஆனால், அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டார். சாதாரணமாக சில நேரம் இப்படி ஆகலாம். ஆனால், ரிஸ்வான் நாடகம் போடுவதில் கில்லாடி என்பது அவர் ஆடிய இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலேயே தெளிவாக தெரிந்தது.
அந்தப் போட்டியில் அவர் காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது போல போட்டி முழுவதும் நாடகம் ஆடிக் கொண்டே பேட்டிங் செய்தார். அதனால், அனைவரும் அவரையே கவனித்தனர். ரன்கள் ஓடும் போது வலியே இல்லாமல் வேகமாக ஓடிய அவர், பின் பேட்டிங் செய்ய நிற்கும் போது மட்டும் கால் வலிப்பது போல நாடகம் ஆடினார்.
போட்டி முடிந்த உடன் தன் நாடகம் அனைவருக்கும் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்து சில சமயம், தனக்கு வலித்ததாகவும் சில சமயம் வலி இல்லாமலேயே தான் அப்படி செய்ததாகவும் கூறி சமாளித்தார். இப்படி நாடகம் ஆடிய ரிஸ்வான், இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் பேட்டிங் செய்ய வராமல் இந்திய அணியை காத்திருக்க வைத்தார்.
இதனால், கடுப்பான கேப்டன் ரோஹித் சர்மா அம்பயரிடம் புகார் செய்தார். மறுபுறம், விராட் கோலி கையில் கடிகாரம் இல்லாத போதும், ஏன் இவ்வளவு நேரம் என்பது போல கைக் கடிகாரத்தை பார்ப்பது போல சைகை செய்தார்.
அதைக் கண்ட ரசிகர்கள் ரிஸ்வான் சென்ற போட்டியில் நாடகம் ஆடியதை போல, இப்போதும் செய்கிறார் என்பதை தான் கோலி குத்திக் காட்டுகிறார் என உணர்ந்து "ரிஸ்வான் உன் நாடகம் போதும்" என கோஷம் எழுப்பத் துவங்கினர். சுமார் 1 லட்சம் ரசிகர்கள் முன் அவமானத்தை சந்தித்தார் ரிஸ்வான்.