அகமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 2023 உலகக்கோப்பை லீக் போட்டியின் போது இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி திடீரென பதற்றமாகி மைதானத்தை விட்டு வெளியே சென்றார்.
அவருக்கு பதில் இஷான் கிஷன் பீல்டிங் செய்ய வந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் பெரும் குழப்பமும், அச்சமும் அடைந்தனர். விராட் கோலிக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது.

அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இந்தியா பந்து வீசத் துவங்கியது. இந்த நிலையில், விராட் கோலி ஆறாவது ஓவரின் போது பதற்றம் அடைந்தார். அப்போது தன் சட்டையை காட்டி, சைகையில் வெளியே அறையில் இருக்கும் சக இந்திய வீரர்கள் மற்றும் குழுவினரிடம் ஏதோ சொல்ல முயன்றார்.
பின் அதே ஓவரில் இஷான் கிஷன் கோலிக்கு மாற்றாக பீல்டிங் செய்ய வந்தார். அப்போது தான் என்ன நடந்தது என சில ஊடகத்தினர் அறிந்தனர். உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் சட்டையில் தோள்பட்டை பகுதியில் மூன்று பட்டை உள்ளது.
முன்பு மூன்று வெள்ளை பட்டைகள் இருந்த இடத்தில் உலகக்கோப்பை தொடருக்காக இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறம் அந்த மூன்று பட்டைகளில் இடம் பெற்று இருக்கிறது. விராட் கோலி, பாகிஸ்தான் போட்டிக்கு களமிறங்கும் போது தவறுதலாக மூன்று வெள்ளை பட்டை கொண்ட சட்டையை அணிந்து வந்து விட்டார்
அதை ஆறாவது ஓவரின் போதே விராட் கோலி கவனித்து இருக்கிறார். உடனே உஷாராகி அறைக்கு சென்றார். அப்போது தான் இஷான் கிஷன் அவருக்கு பதிலாக பீல்டிங் செய்ய வந்தார். அதனால், ரசிகர்கள் அச்சம் அடுத்த ஓவரிலேயே நீங்கியது.
அதன் பின், இந்தப் போட்டியில் சிராஜ் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அப்துல்லா ஷபிக் ஆட்டமிழந்தார். அடுத்து இமாம் உல் ஹக் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.