கராச்சி: இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலியை 3 முறை சவால் விட்டு வீழ்த்திய சம்பவம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜுனைத் கான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. ஒரு கிரிக்கெட்டில் 50 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்கள், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் என்று எண்ணற்ற சாதனைகளை படைத்தவர் விராட் கோலி. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என்று அத்தனை நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தி மிரட்டி வருபவர்.

விராட் கோலியின் ஆக்ரோஷமே ஆட்டத்தை கண்டு எதிரணிகள் அச்சத்தில் மிரளுவார்கள். இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலியை எந்த வீரரும் ஸ்லெட்ஜிங் செய்வதில்லை. இந்த நிலையில் விராட் கோலியை சொல்லி வைத்து வீழ்த்தியது பற்றிய சம்பவம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜுனைத் கான் பேசியுள்ளார்.
இதுகுறித்து ஜுனைத் கான் பேசுகையில், நான் ஏராளமான பேட்ஸ்மேன்களை வீழ்த்தி இருந்தாலும், ரசிகர்கள் அனைவரும் விராட் கோலியின் விக்கெட்டை தான் இன்னும் நினைவில் வைத்துள்ளார்கள். அவரை முதல்முறையாக யு19 உலகக்கோப்பை தொடரில் தான் சந்தித்தேன். அதன்பின் எனது கம்பேக் தொடரில் இந்திய அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கினேன். அப்போது முதல் போட்டியில் விராட் கோலியை வீழ்த்திய போது, அவர் இது மீண்டும் நடக்காது என்று என்னிடம் கூறினார்.
அதன்பின் அடுத்த 2 போட்டிகளிலும் மீண்டும் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி காட்டினே. என்னிடம் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. அதிலும் மூன்றாவது ஒருநாள் போட்டில் காலை உணவு சாப்பிட்ட போது விராட் கோலியிடம் நேரடியாகவே சவால் விடுத்தேன். அப்போது யூனுஸ் கானும் அருகில் இருந்தார். அவர் என்னிடம் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திவிடு என்று என்னிடம் கூறினார்.
ஆனால் 3வது ஒருநாள் போட்டியில் எனது பந்தில் விராட் கோலி யூனுஸ் கானிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததாக தெரிவித்தார். 2012 - 2013 ஆண்டில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் ஜுனைத் கான் மொத்தமாக வெறும் 5 பந்துகளை மட்டும் வீசி விராட் கோலியை 3 முறை வீழ்த்தியுள்ளார். அதேபோல் பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவங்களையும் சேர்த்து 107 போட்டிகளில் விளையாடியுள்ள ஜுனைத் கான், 189 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.