மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் அல்லது இலங்கையில் ஹைபிரிட் மாடல் முறைப்படி நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டுவிட்டது.
அதற்கு பதிலாக வரும் 2027 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் போட்டியில் தாங்கள் வந்து விளையாட மாட்டோம் என்றும் பாகிஸ்தான் கூறியிருக்கிறது. இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கடந்த காலங்களில் வழங்கி இருக்கிறது.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆண்டுதோறும் இந்த தொடர் நடைபெறும். இதில் இந்தியா எப்போதாவது பங்கேற்கும். இப்படி கிரிக்கெட் வரலாற்றில் பல முத்தரப்பு தொடர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஆனால் தற்போது அதிக அளவு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் முத்தரப்பு தொடர் நடைபெறுவதில்லை.
இந்த நிலையில் மீண்டும் முத்தரப்பு தொடரை தொடங்க ஐசிசி முடிவு எடுத்திருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக ரமீஷ் ராஜா இருந்தபோது இந்தியா பாகிஸ்தான் மற்றும் வேறொரு நாடுகளை வைத்து ஆண்டுதோறும் முத்தரப்பு தொடரை நடத்த திட்டமிட்டு இருந்தார். அதற்கு பிசிசிஐ அப்போது அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்பு கொண்டிருப்பதால், இந்த தொடரை நடத்த ஐசிசி ஆர்வம் காட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் இந்த தொடரில் இருந்து இந்தியாவுக்கும் அதிக அளவு பணம் கிடைக்கும் என்பதால் இந்தியாவும் இந்த தொடரை நடத்த ஒப்புக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், இதனால் 2025 அல்லது 26 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் மற்றும் மூன்றாவது ஒரு நாடு பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் வெளிநாடுகளில் நடைபெறும் என தெரிகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஐசிசி தொடர்களை தவிர்த்து இந்திய அணி பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு இந்தியாவின் பாகிஸ்தானும் இரு தரப்பு தொடர்களில் மோதினார்கள்.