மகளிர் டி20 உலககோப்பை: கை குலுக்கினார்களா ஹர்மன்பிரீத் - பாத்திமா சனா?பரபரப்பு பின்னணி!
மும்பை: 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் எஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா. பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா ஆகிய இருவரும் டாஸ் போடும் இடத்தில் கை குலுக்குவதைத் தவிர்த்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றத்தின் காரணமாக கிரிக்கெட் உலகின் இந்த நீண்ட கால பாரம்பரியம் மீண்டும் தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்கள் ஆசிய கோப்பையின் போது, பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதைப் புறக்கணித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது மகளிர் உலகக் கோப்பையிலும் இந்த நடைமுறை நீடித்து வருகிறது.

டாஸ் போடப்பட்ட போது ஹர்மன்பிரீத் மற்றும் பாத்திமா ஆகிய இருவரும் புன்னகையுடன் காணப்பட்டாலும், டாஸ் இந்தியாவின் சாதகமாக விழுந்த பிறகு இருவரும் ஒருவரையொருவர் நெருங்காமல் விலகியே நின்றனர். கடந்த கால மோதல்களின் போது இரு அணி கேப்டன்களும் மிகவும் தீவிரமான முகபாவனையுடன் காணப்பட்ட நிலையில், இம்முறை அவர்கள் சிரித்த முகத்துடன் இருந்தது சற்று வித்தியாசமாக அமைந்தது.
டாஸ் வென்ற பிறகு பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவுள்ளோம். இது பேட்டிங் செய்வதற்கு மிகவும் நல்ல பிட்ச் என்று நினைக்கிறேன். எனவே, முதலில் விளையாடி ஒரு நல்ல ஸ்கோரை போர்டில் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். நாங்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறோம். கடந்த உலகக் கோப்பை தொடர் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்துள்ளது, அதை இந்த உலகக் கோப்பையிலும் தொடர விரும்புகிறோம்" என்றார்.
மறுபுறம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, "டாஸ் வென்றிருந்தால் நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியிருப்போம். ஏனெனில் இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாகத் தெரிகிறது. ஒரு அணியாக நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். எங்களிடம் நல்ல பந்துவீச்சு கூட்டணி உள்ளது, எனவே பேட்டிங்கில் மட்டும் இன்னும் சற்று கவனம் செலுத்தினால் போதுமானது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் கை குலுக்குவதைத் தவிர்ப்பது குறித்த கேள்விக்கு ஹர்மன்பிரீத் கவுர் நேரடியாகப் பதிலளிக்காமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளின் Playing XI
இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), பார்தி புல்மாலி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட்.
பாகிஸ்தான் அணி: குல் பெரோசா, முனீபா அலி (விக்கெட் கீப்பர்), ஆயிஷா ஜாபர், சாய்ரா ஜபீன், அலியா ரியாஸ், நட்டாலியா பர்வைஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், நஷ்ரா சந்து, தஸ்மியா ருபாப், சாதியா இக்பால்.


Click it and Unblock the Notifications

