கொழும்பு: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் ஆட்டம், கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (அக்டோபர் 5) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டிக்கு, மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிட்ச் அறிக்கை, இரு அணிகளுக்கு இடையேயான ரெக்கார்டு, எந்த அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது? என்பதையும் பார்க்கலாம்.
கொழும்பில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டது. இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போதும், காலை நேரத்தில் 100% மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், பிற்பகலில் அது 25% ஆகக் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு தான் இந்தப் போட்டி துவங்க உள்ளது என்பதால் இது நல்ல செய்தியாக உள்ளது.
அதே சமயம், வானம் 99% மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொதுவாகவே இலங்கையில் அதிக மழை பொழிவு இருக்கும் என்பதால் வானிலை அறிக்கையை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும்.
இந்தியா-பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை, வரலாறு ஒருதலைபட்சமாகவே இருந்து வருகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 11 போட்டிகளிலுமே இந்திய அணிதான் வெற்றி வாகை சூடியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை.
உலகக்கோப்பை தொடர்களில் கூட, இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது. கடைசியாக 2022 உலகக்கோப்பையில் சந்தித்தபோது கூட, இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆதிக்கத்தை இன்றும் தொடர இந்திய அணி தீவிரமாகப் போராடும்.
ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் போட்டியில் இலங்கையை 59 ரன்கள் வித்தியாசத்தில் (டி.எல்.எஸ் முறைப்படி) வீழ்த்தி, நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. அந்தப் போட்டியில் மிடில் ஆர்டரில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு, தீப்தி சர்மா (53) மற்றும் அமன்ஜோத் கௌர் (57) ஆகியோரின் அபாரமான அரைசதங்கள் அணியை மீட்டன. பின்னர் பந்துவீச்சிலும் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலித்தார்.
மறுபுறம், பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி, தனது முதல் போட்டியில் வங்கதேசத்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து, நெருக்கடியுடன் களம் காண்கிறது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 129 ரன்களுக்குச் சுருண்டது. இதனால், இந்தத் தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.

ஆர். பிரேமதாச மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்றாலும், மேகமூட்டமான சூழல் காரணமாக ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்பதால், தொடக்க ஓவர்களை நிதானமாக ஆடுவது முக்கியம். ஆட்டம் செல்லச் செல்ல, சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. வானிலை காரணமாக, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.
கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டம், மழையின் குறுக்கீடு இல்லாமல் முழுமையாக நடந்தால், ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான விருந்து காத்திருக்கிறது.