பர்மிங்காம்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று (ஜூலை 20) நடைபெறுவதாக இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலர் இந்த போட்டியில் இருந்து விலகியதை அடுத்து, போட்டி ரத்து செய்யப்படுவதாக WCL அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து WCL நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, மற்றும் யூசுப் பதான் ஆகியோர் இந்தப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். நாட்டின் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக ஷிகர் தவான் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக போட்டி அமைப்பாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும் பதான் சகோதரர்களான இர்ஃபான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகியோரும் போட்டியில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின. ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலும் அதன் பின்னணியும் இவர்களின் முடிவுக்குக் காரணம் என தெரிகிறது.
ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும் நோக்கிலேயே இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக WCL தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற கைப்பந்து போட்டி போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து, இந்த கிரிக்கெட் போட்டியையும் நடத்த திட்டமிட்டதாகக் கூறியுள்ளது.
இருப்பினும், இந்த முடிவு பலரது உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்ட WCL, அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு இந்த நிகழ்வு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், கிரிக்கெட் மீதான அன்பினால் தங்களுக்கு ஆதரவளித்த பிராண்டுகளையும் இது பாதித்திருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ரசிகர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக நாங்கள் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டுவருவதே எங்கள் ஒரே நோக்கமாக இருந்தது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்," என்று WCL தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நாட்டின் நலன் கருதி வீரர்கள் எடுத்த இந்த முடிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.