
பிப்ரவரி 15ல் மோதல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. பிப்ரவரி 15ம்தேதி, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

மூன்று காரணங்கள்
இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த காரணங்கள் மூன்று உள்ளன. முதலாவது காரணம், அனைவருக்கும் தெரிந்தது போலவே, எதிரி நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான எதிர்பார்ப்பு, இரண்டாவது காரணம், இது உலக கோப்பை போட்டி என்பது, மூன்றாவது முக்கிய காரணம், இவ்விரு அணிகளும் சமீபத்தில் விளையாடிக்கொள்ளவில்லை என்பதாகும்.

ரசிகர்கள் குவிந்தனர்
இந்தியா-பாகிஸ்தான் அணிகள், கடந்த 2011ம் ஆண்டு மொகாலியில் நடந்த அரையிறுதி போட்டியில் மோதின. அதில் இந்தியா வென்று இறுதி போட்டிக்குள் சென்றது. மொகாலியில் நடைபெற்ற கடந்த உலக கோப்பை அரையிறுதி போட்டியை, உலகெங்கிலும் 988 மில்லியன் ரசிகர்கள் கண்டு களித்திருந்தனர்.

எதிர்பார்ப்பு
இந்நிலையில், ஆஸ்திரேலிய உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை 1 பில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்று அந்த நாட்டு விளையாட்டு துறை வல்லுநர்கள் கட்டியம் கூறுகின்றனர். பிப்ரவரி 15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் உலகெங்கிலும் டிவிகளில் போட்டியை பார்ப்போர் எண்ணிக்கை கட்டாயம் 1 பில்லியனை தாண்டும் என்கின்றனர் அவர்கள். அதாவது 100 கோடியை தாண்டப்போகிறதாம்.

இந்தியாவே ஆதிக்கம்
உலக கோப்பை போட்டிகளில், பாகிஸ்தான் இதுவரை இந்தியாவை வென்ற வரலாறு கிடையாது. 1992ம் ஆண்டு முதல் இவ்விரு அணிகளும் உலக கோப்பைகளில் 5 முறை மோதிக்கொள்ளும் வாய்ப்பை பெற்றிருந்தபோதிலும், இந்தியாவே அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications











