டர்பன்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத உள்ளன. 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் இந்த இரண்டு அணிகளும் மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி இன்று (அக்டோபர் 8) மோத உள்ளது. இந்த போட்டி டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஆடுகளம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், இந்த மைதானத்தில் சமீப காலமாக தென்னாப்பிரிக்கா அதிக தோல்விகளை சந்தித்து இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அணி இந்த மைதானத்தில் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக ஆட இருந்த போட்டி மழையால் நடைபெறவில்லை. அதற்கு முன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி இதே மைதானத்தில் ஆடி இருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் அனைத்து போட்டிகளும் இதே மைதானத்தில் நடைபெற்றது.
அந்த மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது. எனவே, தென்னாப்பிரிக்காவுக்கு டர்பன் மைதானம் சமீப காலமாக பாதகமாகவே இருந்துள்ளது. இந்த மைதானம் அதிக ஸ்கோர் எடுக்கக் கூடிய மைதானமாகவும் உள்ளது.
இந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஏழு சர்வதேச டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி சராசரியாக 184 ரன்கள் எடுத்து இருக்கிறது. எனவே, இதுவும் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா எளிதாக ரன் குவிக்க இந்த மைதானம் உதவும்.
இந்த தொடரில் நான்கு போட்டிகள் இருப்பதால் மூன்று போட்டிகளை வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். எனவே, இந்திய அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகிறது.