டர்பன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக களமிறங்கிய இந்திய அணியின் ஜித்தேஷ் ஷர்மா ரசிகர்களை ஏமாற்றினார். டி20 உலக கோப்பை போட்டிக்கு இன்னும் ஐந்து ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணியின் பினிஷராக யார் வரப்போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
ஒரு சிலர் ரிங்கு சிங் தான் அதற்கு சரியான நபர் என்று கூறினாலும் மற்றொரு சிலர் ஜித்தேஷ் ஷர்மாவை அந்த இடத்திற்கு பரிசோதிக்க வேண்டும் என்று கூறினர். இந்த நிலையில் ஜித்தேஷ் சர்மா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் அது அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தொடக்க வீரர்கள் கில் ,ஜெய்ஸ்வால் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தவுடன் சூரியகுமார் யாதவ் அரை சதம் அடித்து அணியை காப்பாற்றினார். இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய ரிங்கு சிங் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார்.
சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழந்தவுடன் ஜித்தேஷ் ஷர்மா பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் ரிங்கு சிங் ஜிதேஷ் சர்மாவும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியை காப்பாற்ற போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதில் யார் நன்றாக விளையாட போகிறார் என்று கேள்வியும்எழுந்தது. ஆனால் ஜித்தேஷ் சர்மா மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதை கண்டதும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஜிதேஷ் ஷர்மா மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்திருந்தும் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொதப்பிவிட்டார். இன்னும் அவருக்கு ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது. அதில் தனது திறமையை அவர் நிரூபித்தாக வேண்டும். இல்லை எனில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக அணியில் திரும்பி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.