கேபெர்ஹா : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடக்க உள்ள இரண்டாவது டி20 போட்டி மழைக்கு நடுவே நடைபெற உள்ளது. மழை, மற்றும் பிட்ச்சின் தன்மையால் இந்திய அணிக்கு இரண்டு சவால்கள் உள்ளன.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று உள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

டர்பன் நகரில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டி கேபெர்ஹா நகரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாகவும் மழை பெய்வது உறுதி என வானிலை அறிக்கை தெரிவித்து உள்ளது.
அதே சமயம், போட்டி துவங்கும் நேரத்துக்கு பின்னர் மழை பெய்ய வாய்ப்பு குறைவு எனவும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதால் போட்டி தாமதமாக துவங்கினாலும் முழுமையாக நடைபெறும் வாய்ப்பு உள்ளது. மழை பெய்தால் பிட்ச்சின் தன்மை நிச்சயம் வேகப் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும்.
அது மட்டுமின்றி போட்டி நடக்க உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானம் இரண்டாவது பாதியில் ஸ்பின் மற்றும் ஸீம் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும். அதனால், இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யவே அணிகள் விரும்பும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்வதே சரியான முடிவாகவும் இருக்கும்.
மழை மற்றும் டாஸ் இந்தப் போட்டியில் பெரும் பங்கு வகிக்க இருப்பதால், இந்திய அணிக்கு இது இரண்டுமே சவாலாக இருக்கும். இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்றால், இந்திய அணி பாதி கிணறை தாண்டிவிட்டதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.
தென்னாப்பிரிக்காவக்கு எதிராக 2வது டி20 போட்டியில் களமிறங்க உள்ள உத்தேச இந்திய அணி :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.