கேபெர்ஹா : ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டி20யில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த மாற்றம் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏன் நன்றாக ஆடி வரும் வீரர்களை தேவையே இல்லாமல் மாற்றுகிறீர்கள்? என ரசிகர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி கேபெர்ஹாவில் துவங்கிய போது, இந்திய அணியை அறிவித்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் அதிக ரன் குவித்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அதிக விக்கெட் வீழ்த்திய ரவி பிஷ்னோய் களமிறங்கும் 11 வீரர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. ருதுராஜ்-க்கு உடல்நிலை சரியில்லை என கூறப்பட்டது.
ஆனால், ரவி பிஷ்னோய்-ஐ நீக்கியது குறித்து எதுவும் சொல்லவில்லை கேப்டன் சூர்யகுமார் யாதவ். ஷ்ரேயாஸ் ஐயரும் நீக்கப்பட்டு இருந்தார். இவர்கள் மூவருக்கு பதில் துவக்க வீரராக சுப்மன் கில், மூன்றாம் வரிசையில் திலக் வர்மா, சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
ஏற்கனவே, ஆஸ்திரேலிய டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசி இருந்த மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேலுக்கு உத்தேச அணியல் கூட இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாகவே ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இந்த மாற்றங்களிலேயே நியாயமே இல்லாத மாற்றம் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டி ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டது தான். அது குறித்து ரசிகர்கள் பலரும் ரவி பிஷ்னோய் பலிகடா ஆக்கப்பட்டு விட்டதாக கொந்தளித்து வருகிறார்கள். சமூக ஊடகங்களில் அது குறித்து அதிக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.