கேபெர்ஹா: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள இரண்டாவது டி20 போட்டி கேபெர்ஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தின் பிட்ச் மற்றும் போட்டி சூழ்நிலை எப்படி இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
இந்த மைதானத்தின் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்த பிட்ச்சில் நல்ல பவுன்ஸ் இருக்கும். பந்து பிட்ச் ஆனவுடன் நன்றாக மேலே எழும்பும். இது இரு அணிகளின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும். தென்னாப்பிரிக்கா அணி தங்கள் வேகப் பந்துவீச்சாளர்களை முழுமையாக பயன்படுத்த நினைக்கும்.

அதே போல இந்திய அணியும் இந்த போட்டிக்கு ஹர்திக் பாண்டியா உடன் சேர்த்து நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த மைதானத்தில் போட்டி நடக்கும் போது 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் இருக்கும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. காற்றில் ஈரப்பதம் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு சிரமம் ஏற்படலாம். எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த முடிவாக இருக்கும். இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக ரமன்தீப் சிங் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. ஏனெனில், இந்த பிட்ச்சில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அவசியம் இல்லை.
எனவே, முதல் டி20 போட்டியில் தலா 3 விக்கெட்கள் வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி அணியில் நீடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். அக்சர் பட்டேலுக்கு பதிலாக ரமன்தீப் சிங் இடம் பெற்றால் அவர் நான்காவது வேகப் பந்துவீச்சாளராக செயல்படுவார். அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், ஹர்திக் பாண்டியா ஆகியோர் முதல் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களாக செயல்படுவார்கள்.
2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல் / ரமன்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.