கேப் டவுன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 134 ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்டில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது.
இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் சேர்ந்து மொத்தம் 23 விக்கெட்களை வீழ்த்தி உள்ளன. முதல் இன்னிங்க்ஸில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய அணியின் முகமது சிராஜ் 6 விக்கெட்களும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ரபாடா, என்கிடி, பர்கர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஒரு ரன் அவுட் செய்தது தென்னாப்பிரிக்கா. அதன் பிறகு முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்து இருந்தது. முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் 23 விக்கெட்கள் வீழ்ந்தன.
இது டெஸ்ட் வரலாற்றில் முதல் நாள் ஆட்டத்தில் வீழ்த்தப்பட்ட இரண்டாவது அதிக பட்ச விக்கெட் எண்ணிக்கை ஆகும். முன்னதாக 1902இல் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் 25 விக்கெட்கள் வீழ்ந்ததே அதிகபட்ச சாதனையாக உள்ளது.
இரண்டாவது இடத்தில் 1890இல் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி இடம் பெற்றுள்ளது. அந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 22 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டு இருந்தன. அந்த சாதனையை இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் 23 விக்கெட்கள் வீழ்த்தி முறியடித்து இருக்கின்றன.
ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக விக்கெட்கள் விழுவது அபூர்வமான ஒன்று. அதற்கடுத்த நாட்களில் கூட பிட்ச் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் விக்கெட்கள் அதிக அளவில் சரியும். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் எப்போதும் முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் வீழ்ச்சி 20-ஐ தாண்டியதில்லை.
2019இல் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டியில் முதல் நாள் 20 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது. ஆனால், அது அனுபவமற்ற அயர்லாந்து அணியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இப்போது இந்தியா - தென்னாப்பிரிக்கா என இரண்டு அனுபவமிக்க வீரர்களை கொண்ட அணிகள் முதல் நாள் ஆட்டத்தில் 23 விக்கெட்களை இழந்து அதிசயத்தை நிகழ்த்தி உள்ளன.