கேப் டவுன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த மைதானத்தின் பிட்ச் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்துள்ளது. எனவே, இரண்டாவது போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது போட்டி நடைபெற உள்ள கேப் டவுன் மைதானத்தின் பிட்ச் அறிக்கையில் பந்துவீச்சில் அதிக வேகம் மற்றும் அதிக பவுன்ஸ் இருக்கும் என கூறப்பட்டு இருக்கிறது. அதனால், சுழற் பந்துவீச்சாளர்களுக்கு இங்கு அதிக வேலை இல்லை. ஒரு சுழற் பந்துவீச்சாளரை மட்டுமே இந்திய அணி பயன்படுத்தும் என தெரிகிறது.
இந்த பிட்ச்சில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக பவுன்ஸ் மற்றும் வேகம் கிடைக்கும் என்பதால் தென்னாப்பிரிக்க அணி முதல் போட்டி போல நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை களமிறக்கி இந்திய அணிக்கு கடும் சவாலை விடுக்கப் போகிறது.
இந்திய பேட்ஸ்மேன்களில் விராட் கோலி மட்டுமே கடந்த காலத்தில் கேப் டவுன் மைதானத்தில் ரன் குவித்து இருக்கிறார். அவர் 56 என்ற பேட்டிங் சராசரியில் ரன் குவித்து இருக்கிறார். எனவே, அவரை நம்பியே இந்திய அணி உள்ளது. மற்ற பேட்ஸ்மேன்கள் சராசரியாக 20 - 30 ரன்கள் எடுத்தாலே கூட அது இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருக்கும். இதுதான் அங்குள்ள நிலைமை.
இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் நிச்சயம் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் அதிக விக்கெட்களை வீழ்த்த வேண்டும்.
இந்தப் போட்டியின் போது முதல் மூன்று நாட்களுக்கு மழை வராது. ஆனால், கடைசி இரண்டு நாட்களில் 40 சதவீதம் மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனினும், அது பெரிய அளவில் இருக்காது என வானிலை அறிக்கை கூறி உள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் டெஸ்ட்டில் மூன்று நாட்களுக்குள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆல் - அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.