மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதற்கு காரணம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி தடுமாறியதுதான்.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி பல மாற்றங்களை செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் ஜடேஜா முழு உடல் தகுதியை எட்டி இருந்தால் அவர்தான் கண்டிப்பாக அணிக்குள் வர வேண்டும்.

அஸ்வின் பந்துவீச்சில் அவரிடமிருந்து எதை எதிர்பார்த்தமோ அதை அவர் சரியாக செய்திருக்கிறார். ஆனால் அந்த ஆடுகளத்தில் நாம் ஜடேஜாவை தான் மிஸ் செய்தோம். ஏனென்றால் ஜடேஜா பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் இருந்து விளையாடி இருந்தால் நிச்சயம் நாம் கூடுதலாக ரன் சேர்த்திருப்போம். ரோகித் சர்மாவாக நீங்கள் இருந்தால் நிச்சயம் பந்துவீச்சு படையில் எந்த மாற்றமும் செய்யாமல் இரண்டாவது டெஸ்டில் களம் இறங்குவீர்கள் அதுவும் சரியாகத்தான் உங்களுக்கு தோன்றும்.
ஆனால் நீங்கள் அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் முகேஷ் குமாரை கொண்டு வாருங்கள். பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் அவர் சரியான நபராக இருப்பார் என நினைக்கிறேன். அதே சமயம் பிரசித் கிருஷ்ணா பயிற்சி முகாமில் நன்றாக செயல்பட்டார் என்று நீங்கள் நினைத்தால் இரண்டாவது டெஸ்டையும் அவரையும் வைத்து விளையாடுங்கள் என்று கூறியுள்ளார்.
முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு ரோகித் சர்மாவை பொறுத்தவரை அணி ஒருங்கிணைந்து செயல்பட தவறிவிட்டது என்று ஒரே வரியில் பதில் கூறி இருக்கிறார். முதல் இன்னிங்ஸில் கே எல் ராகுலின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 245 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. ஆனால் தென்னாபிரிக்கா 408 ரன்கள் அடித்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 34.1 ஓவரில் 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.