கவுஹாத்தி: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கவுஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செயல்படுகிறார். இது குறித்துப் பேசிய பண்ட், "நேற்றுதான் நான் கேப்டனாகச் செயல்படப் போவது எனக்குத் தெரியவந்தது. இது எனக்கு மிகவும் பெருமையான தருணம். இந்த வாய்ப்பை வழங்கிய பிசிசிஐ-க்கு நன்றி. இதை நான் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இரு அணிகளிலுமே முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இளம் வீரர்கள் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்க அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செனுரன் முத்துசாமி அணியில் இணைந்துள்ளார்.
கவுஹாத்தி மைதானம் சிவப்பு மண்ணால் ஆனது. ஆடுகளத்தில் புற்கள் கணிசமாகக் காணப்படுவதால், ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் காற்றில் ஈரப்பதம் இருக்கும். இருப்பினும், முதல் ஒரு மணி நேரத்தைச் சமாளித்துவிட்டால், இது பேட்டிங் செய்ய மிகச் சிறந்த ஆடுகளமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சன், செனுரன் முத்துசாமி, சைமன் ஹார்மர், கேசவ் மகராஜ்.