கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்கிரம் கொடுத்த கேட்ச்சை பிடித்தவுடன் கோபத்தை வெளிப்படுத்தினார். கே எல் ராகுல் சில ஓவர்களுக்கு முன்பு செய்த தவறு, ரோஹித்தின் கோபத்துக்கு காரணமாக அமைந்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பேட்டிங் செய்யவே மிகவும் கடினமான கேப் டவுன் பிட்ச்சில் நடந்தது. இந்த பிட்ச் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு அளித்ததை அடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்தது. சிராஜ் முதல் இன்னிங்க்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.

அடுத்து இந்தியா 153 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்க அணியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய திட்டம் தீட்டினார் கேப்டன் ரோஹித் சர்மா.
தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர் ஐடன் மார்கிரம் மட்டுமே இந்த மோசமான பிட்ச்சில் இரண்டாம் இன்னிங்க்ஸில் தாக்குப் பிடித்து ரன் குவித்தார். மற்ற தென்னாப்பிரிக்க வீரர்கள் விக்கெட்களை இழந்து கொண்டே வந்தனர். ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 128 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து இருந்தது.
அப்போது பும்ராவின் பந்தில் 73 ரன்கள் அடித்து இருந்த ஐடன் மார்கிரம் ஒரு எளிய கேட்ச் கொடுத்தார். அதை விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் நழுவ விட்டார். அதனால் பும்ரா விரக்தி அடைந்தார். கேப்டன் ரோஹித் சர்மா கடும் கோபம் அடைந்தார். மிகக் கடினமான இந்த பிட்ச்சில் 10 ரன் கூடுதலாக போனால் கூட சமாளிப்பது கடினம் என்பதால் ரோஹித் கோபத்தில் இருந்தார்.
தென்னாப்பிரிக்க அணியை 140 - 150 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய வாய்ப்பு கிடைத்தும் அது கே எல் ராகுலால் நழுவிப் போனது. பின்னர் மார்கிரம் அதிரடி ஆட்டம் ஆடினார். அதனால் மேலும் பதற்றம் அடைந்த ரோஹித் சர்மா முகமது சிராஜை பந்து வீச அழைத்தார். ஆஃப் சைடில் பந்து வீசுமாறு சிராஜிடம் கூறினார். அவர் நினைத்தது போல மார்கிரம் பந்தை அடித்து ஆட முயன்று கேட்ச் கொடுத்தார். ரோஹித் சர்மா கேட்ச்சை பிடித்த உடன் தன் கோபத்தை வெளிகாட்டி பந்தை தூக்கி எறிந்தார்.
சதம் அடித்து 106 ரன்கள் குவித்த பின்னரே ஆட்டமிழந்தார் மார்கிரம். தென்னாப்பிரிக்கா இரண்டாம் இன்னிங்க்ஸில் 176 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய அணிக்கு 79 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது தென்னாப்பிரிக்கா. பின்னர் இந்திய அணி 3 விக்கெட்கள் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டி போட்டியில் வென்றது. இதை அடுத்து மார்கிரம் குவித்த கூடுதல் ரன்களால் இந்திய அணிக்கு எந்த சிக்கலும் வரவில்லை.