ஜோகனஸ்பர்க் : இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது t20 போட்டி இன்று இரவு 8:30 மணிக்கு ஜோனஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் இரண்டாவது t20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடரை தீர்மானிக்க கூடிய கடைசி டி20 போட்டி இதுவாகும். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் சமனில் முடிந்துவிடும். தென்னாப்பிரிக்காவிடம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி டி20 தொடரில் தோற்றதில்லை.

இந்த சாதனையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் பல மாற்றங்களை செய்ய வாய்ப்பு உள்ளது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோற்றத்திற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் இரண்டு தொடக்க வீரர்களுமே டக்அவுட் ஆகி வெளியேறியதுதான். இதனால் கடைசி ஆட்டத்தில் கில்லுக்கு பதிலாக சிஎஸ்கே வீரர் ருதுராஜ் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதேபோன்று கடந்த டி20 தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி டி20 போட்டியில் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது. அவர் திலக் வர்மா இடத்தில் நம்பர் மூன்றாவது வீரராக களத்திற்கு திரும்பலாம். மற்றபடி பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் இருக்காது. எனினும் பந்துவீச்சை பொறுத்தவரை இந்தியாவுக்கு சில சிக்கல்கள் இருக்கிறது.
இந்திய அணி தோற்றத்துக்கு முக்கிய காரணமே வேகப்பந்துவீச்சாளர்கள் அடி வாங்கியதுதான். ஆனால் தீபக்சாகர் தற்போது இல்லாததால் இந்திய அணி அதே மூன்று வீரர்களை வைத்து களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் டி20 தரவரிசையில் உலகின் முதல் நிலை வீரரான ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவுக்கு பதில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.