மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தினார். அண்டர் 19, ஐபிஎல் என விளையாடிய அனைத்து தொடர்களிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவே இல்லை.
காரணம் தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் போன்ற விக்கெட் கீப்பர்கள் எல்லாம் அணியில் தங்களுடைய இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால், சஞ்சு சாம்சனுக்கு கடைசிவரை வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

பல போராட்டத்திற்கு பிறகு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை அவர் சரியாக பயன்படுத்த முடியாத நிலையில் ஏற்பட்டிருக்கிறது. சஞ்சு சாம்சன் டி20 போட்டியில் 2015 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் எட்டு வருடத்தில் அவர் வெறும் 24 போட்டிகள் தான் இந்தியாவுக்காக விளையாடுகிறார். இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனுக்கு 2021 ஆம் ஆண்டு தான் வாய்ப்பு கிடைத்தது.
இந்த மூன்று ஆண்டுகளில் சஞ்சு சாம்சன் வெறும் 15 போட்டிகள் தான் விளையாடுகிறார். சஞ்சு சாம்சன் எப்போதுமே தொடக்க வீரராக சிறப்பாக விளையாடக் கூடியவர். முதல் மூன்று இடங்களில் அவரை களம் இறக்கி விட்டால் நிச்சயம் அவர் சாதிப்பார். ஆனால் சஞ்சு சாம்சனுக்கு அந்த வாய்ப்பை இதுவரை பிசிசிஐ கொடுத்ததே கிடையாது. இந்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கூட ரஜத் பட்டிதார் என்ற நடுவரிசை வீரரை தொடக்க வீரராக அனுப்பிவிட்டு சஞ்சு சாம்சனை கோலி இடத்தில் களமிறக்கினார்கள்.
ஆனால் தங்களுக்கு எதிரான சூழல்கள் இருந்தாலும் சாதித்து காட்டுவது தான் சாம்பியன் வீரர்களின் குணம். அந்த வகையில் தொடக்க வீராக இருந்தாலும் சரி நம்பர் 3வது வீரராக இருந்தாலும் சரி என்று சஞ்சு சாம்சன் என்று அதிரடியை காட்டி இந்திய அணியை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். தற்போது சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்தில் விளையாடி சதம் அடித்து விட்டதால் இனி விராட் கோலி இடத்தில் அவர்தான் களமிறங்க போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் அந்த இடத்தில் திலக் வர்மாவை இந்திய அணி பயன்படுத்தியது. ஆனால் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது சஞ்சு சாம்சன் சதம் அடித்திருப்பதால் இனி இந்திய அணி அவருக்கு அந்த தொடர்ந்து வாய்ப்பு வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சஞ்சு சம்சனின் இந்த சதத்தை கேரள ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.