ஜோகனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடுகிறது. இதில் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடர் சமனில் முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி தென்னாபிரிக்காவிடம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை டி20 தொடரை தோற்றதில்லை. இந்த சாதனையை தொடர வேண்டுமென்றால் இந்தியா இன்றைய போட்டியில் வென்றே ஆக வேண்டும்.

இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 180 ரன்கள் என்ற இலக்கைத் தொட்டாலும் தொடக்க வீரர்கள் கில் மற்றும் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதற்கு காரணம் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சு படைத்தான். குறிப்பாக தென்னாப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோயிட்சே மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு வில்லனாக திகழ்ந்தார்.
இதைப் போன்று மார்க்கோ யான்சன் தன்னுடைய பவுன்ஸ் மற்றும் வேகத்தால் இந்திய வீரர்களை திணறடித்தார். இந்த இருவரும் தென்னாப்பிரிக்க வெற்றிக்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தார்கள். இந்த நிலையில் மார்க்கோ யாசன் மற்றும் ஜெரால்ட் கோயேட்சே இருவரும் இன்றைய டி20 ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இரு வீரர்களே தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க செல்வதால் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு பர்ஜர் மற்றும் டொனோவன் பெரேரியா ஆகிய இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை அணிக்குள் கொண்டுவர தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முடிவெடுத்திருக்கிறது. இந்த நிலையில் இரு ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாததால் இது இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக தான் பார்க்கப்படுகிறது. இதில் இந்தியா வெற்றி பெறுமா தொடரை சூரியகுமார் தலைமையிலான அணி காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.