கொல்கத்தா: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டம் கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக தர்மசாலா மற்றும் கட்டாக் நகரங்களில் நடந்த முதல் இரு டி20 போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றிவிட்டது தென் ஆப்பிரிக்க அணி. இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ள 3வது ஆட்டத்திலும் வென்று இந்தியாவை 'ஒயிட் வாஷ்' ஆக்க அந்த அணி முயலும்.

இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், 5வது மற்றும் 6வது இடங்களில் இறங்கும் பேட்ஸ்மேன்கள் கடந்த 2 போட்டிகளிலும் ஜொலிக்கவில்லை.
எனவே, அம்பட்டி ராயுடுவுக்கு பதிலாக, ரஹானேவை அணியில் சேர்க்க டோணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் அஸ்வின் தென் ஆப்பிரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் அக்ஷர் படேலின் பந்துவீச்சு எடுபடவில்லை. எனவே அவருக்குப் பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்படலாம். ஸ்டூவர்ட் பின்னிக்கு வாய்ப்பு வழங்கி, ஹர்பஜனுக்கு கல்தா கொடுக்கவும் வாய்ப்புள்ளது.

ஒருநாள் தொடரை நம்பிக்கையோடு எதிர்கொள்ள, இப்போட்டியில் ஆறுதல் வெற்றி அவசியப்படுகிறது இந்தியாவுக்கு. எனவே அந்த அணி கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி ஆடும் என்று எதிர்பார்க்கலாம். போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.