தர்மசாலா: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் உள்ளது. இந்நிலையில், தொடரில் முன்னிலை வகிக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் 3-வது டி20 போட்டி, உலகின் மிக அழகான மைதானங்களில் ஒன்றான தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியின் வானிலை மற்றும் பிட்ச் நிலவரம் எப்படி இருக்கும் என்பதை இங்கே விரிவாகக் காண்போம்.
தர்மசாலாவில் மழை பெய்ய வாய்ப்பே இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஆனால், வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது "கடும் குளிர்" தான். பகல் நேரத்திலேயே அதிகபட்ச வெப்பநிலை 13°C ஆகத்தான் இருக்கும். போட்டி நடக்கும் இரவு நேரத்தில் வெப்பநிலை 10°C வரை குறைய வாய்ப்புள்ளது.
கடும் குளிரில் ஃபீல்டிங் செய்வது மற்றும் பந்தை பிடிப்பது வீரர்களுக்குக் கடினமான சோதனையாக இருக்கும். இந்திய வீரர்கள் பயிற்சியின் போதே குளிரை சமாளிக்க முடியாமல் திணறிய காட்சிகள் வெளியாகின. அதிலும் ஹர்திக் பாண்டியா கண்கள் மட்டுமே வெளியே தெரியும் அளவுக்கு முகத்தையும் குளிரில் இருந்து மறைத்துக் கொண்டு நின்றார்.

தர்மசாலா மைதானம் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருவருக்குமே வாய்ப்பளிக்கும் ஒரு மைதானம். இந்த மைதானம் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருப்பதால், இங்கு காற்று வீசும். இதனால், ஆட்டத்தின் முதல் 6 ஓவர்களில் (பவர்-பிளே) புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும். வேகப்பந்து வீச்சாளர்கள் இதைச் சரியாகப் பயன்படுத்தினால் விக்கெட்டுகளை அள்ளலாம். ஆரம்பகட்ட ஸ்விங்கை மட்டும் பேட்ஸ்மேன்கள் சமாளித்துவிட்டால், பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி பேட்டிற்கு வரும். அதன் பிறகு ரன் வேட்டை நடத்தலாம்.
குளிர் பிரதேசம் என்பதால் 'பனிப்பொழிவு' நிச்சயம் இருக்கும். இது இரண்டாவது பந்துவீசும் அணிக்குப் பாதகமாக அமையும். பந்து ஈரமாகி வழுக்கும் என்பதால், சுழற்பந்து வீச்சாளர்களால் பந்தைக் இறுக்கமாக பிடிக்க முடியாது. எனவே, டாஸ் வெல்லும் கேப்டன் கண்ணை மூடிக்கொண்டு பந்துவீச்சைத் தேர்வு செய்வதே பாதுகாப்பானது.
ஒருவேளை முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால், அந்த அணி குறைந்தது 200 முதல் 210 ரன்கள் குவித்தால் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கும்.
இந்த மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதிய ஒரே ஒரு டி20 போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியே வெற்றி பெற்றுள்ளது. அந்த வரலாற்றை மாற்றி, இந்தியா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.