லக்னோ: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தர்மசாலாவில் பெற்ற வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இன்று (புதன்கிழமை) லக்னோவில் நடைபெறும் 4-வது போட்டியில் வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தின் பிட்ச் எப்படி இருக்கும்? வானிலை நிலவரம் என்ன? என்பதை இங்கே விரிவாகக் காண்போம்.

லக்னோவில் இன்று மழை பெய்ய வாய்ப்பே இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால், வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது "கடும் குளிர்" தான். பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 19°C ஆக இருக்கும். போட்டி நடக்கும் இரவு நேரத்தில் வெப்பநிலை 11°C வரை குறைய வாய்ப்புள்ளது. பனிப்பொழிவு மற்றும் குளிர் காற்று வீரர்களின் செயல்பாட்டை சோதிக்கும்.
ஏகானா மைதானம் பொதுவாக ஒரு 'ஸ்போர்ட்டிங் விக்கெட்' ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் என இருவருக்குமே சம வாய்ப்பு கிடைக்கும். ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பேட்ஸ்மேன்கள் பந்தை நம்பி ஷாட்களை ஆடலாம்.
குறைந்த வெப்பநிலை காரணமாகக் காற்றில் ஈரப்பதம் இருக்கும். இதனால் ஆட்டத்தின் முதல் 6 ஓவர்களில் (பவர்-ப்ளே) புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும். எனவே, தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் சில ஓவர்களைக் கவனமாகக் கையாள வேண்டும். பனிப்பொழிவு காரணமாகப் பந்து வழுக்கும் என்பதால், சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தைக் கிரிப் (Grip) செய்து வீசுவது கடினமாக இருக்கும்.
லக்னோவில் 'பனிப்பொழிவு' ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவது மிகவும் சவாலானது. எனவே, டாஸ் வெல்லும் கேப்டன் தயங்காமல் பந்துவீச்சைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். எதிரணியை 170 முதல் 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால், சேஸிங் செய்வது எளிதாக இருக்கும்.
இன்று இந்தியா வெற்றி பெற்றால், 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி, 2025-ம் ஆண்டில் எந்த ஒரு டி20 தொடரையும் இழக்காத அணி என்ற பெருமையுடன் ஆண்டை நிறைவு செய்யும். தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், தொடர் 2-2 எனச் சமனாகி, கடைசிப் போட்டி ஃபைனல் போல மாறும். தர்மசாலாவில் பெற்ற வெற்றியின் உத்வேகத்துடன் இந்திய இளம் படை லக்னோவிலும் கொடி நாட்டுமா?.