மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த அஜின்க்யா ரஹானே எந்த காரணமும் இன்றி தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டார்.
தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இமாலய தோல்வி அடைந்துள்ள நிலையில், ரஹானே ஒரு வீடியோ வெளியிட்டு, தன்னை தேர்வு செய்யாதது குறித்து சத்தமே இல்லாமல் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அஜின்க்யா ரஹானே இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் தூண் போல செயல்பட்டு வந்தார். சில சமயம் அவர் சரியாக ரன் குவிக்காமல் போய் இருந்தாலும், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் எல்லாம் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பும் போது கைகொடுத்து இருக்கிறார். குறிப்பாக பவுன்ஸ் அதிகம் இருக்கும் ஆடுகளங்களில் ரஹானே சிறப்பாக ஆடுவார்.
ஆனால், அவரையும், புஜாராவையும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கியது தேர்வுக் குழு. இதன் பின்னணியில் கேப்டன் ரோஹித் சர்மா இருப்பதாக கூறப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோருக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டி இவர்களை நீக்கியதாக அப்போது பேசப்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகிய இருவரும் ரன் குவிக்கவில்லை. இரண்டு இன்னிங்க்ஸிலும் அணியை கை விட்டனர். இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. போட்டி நடந்த செஞ்சுரியன் மைதானத்தில் பவுன்ஸ் அதிகம் இருந்ததால் இந்திய வீரர்களால் அதை சமாளித்து ஆட முடியவில்லை.
அந்த இடத்தில் புஜாரா, ரஹானே ஆகியோர் இருந்து இருந்தால் அவர்களின் அனுபவம் காரணமாக சிறப்பாக ஆடி இருப்பார்கள் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறினர். இந்த நிலையில், போட்டி முடிந்த மறுநாள் ரஹானே தான் பேட்டிங் பயிற்சி செய்வதை போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ரஹானே எதுவும் பேசாத போதும், அவர் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு "ஒருநாளும் ஓய்வு இல்லை" என்ற வாசகத்தை மட்டும் பகிர்ந்து இருக்கிறார். இதன் மூலம் அவர் தன்னை அணியில் தேர்வு செய்யாததால் இந்திய அணி தோல்வி அடைந்ததை சுட்டிக் காட்டுகிறார் என ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். குறிப்பாக கடந்த காலங்களில் பவுன்ஸ் அதிகம் இருக்கும் ஆடுகளங்களில் அவர் சிறப்பாக ஆடியதை சுட்டிக் காட்டி வருகின்றனர்.
தன்னை தேர்வு செய்யாதது குறித்து இதுவரை எந்த எதிர்வினையும் செய்யாமல் இருந்த ரஹானே, இந்திய அணி படுதோல்வி அடைந்த நேரமாக பார்த்து ரோஹித் சர்மாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு தான் இருப்பதை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தி இருக்கிறார். அவர் வீடியோ வெளியிட்ட சில நிமிடங்களில் ரஹானே என்ற பெயர் சமூக ஊடகங்களில் டிரென்டிங் ஆகவும் ஆனது.