டர்பன் : வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த நிலையில், அவர் தென்னாப்பிரிக்காவுக்கே செல்லவில்லை, இந்தியாவில் தான் இருக்கிறார் என் தகவல் வெளியாகி உள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தீபக் சாஹர் இடம் பெற மாட்டார் என போட்டி துவங்கும் முன் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்துக்கு தகவல் அளித்தார்.

தீபக் சாஹரின் தந்தைக்கு மூளை பக்கவாத நோய் இருப்பதாகவும், அவரை அவசரமாக மருத்துவமனையில் சேர்த்து இருப்பதையும் அறிந்ததை அடுத்து அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கு முன் தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்.
அதை அடுத்து அவர் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் இடம் பெற்ற போதும் அவர் இந்தியாவிலேயே தன் தந்தையுடன் தங்கி மருத்துவமனை சிகிச்சைகளை கண்காணித்து வருவதாக அந்த அதிகாரி கூறி இருக்கிறார். மேலும், தீபக் சாஹர் தென்னாப்பிரிக்கா வந்தாலும் கூட அவர் தற்போது இருக்கும் மனநிலையில் அவரால் முழு வீச்சில் போட்டியில் பங்கேற்க முடியுமா என தெரியவில்லை. எனவே, அவர் தென்னாப்பிரிக்க டி20 தொடரின் முதல் போட்டி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொடரில் பங்கேற்பதே சந்தேகம் தான் எனக் கூறி இருக்கிறார். தீபக் சாஹர் அவராக விலகினாரா? அல்லது பிசிசிஐ அவரை நீக்கி இருக்கிறதா? என்பது தெரியவில்லை.
முன்னதாக தான் ஆஸ்திரேலிய டி20 தொடரில் கடைசி போட்டியில் விலகியது குறித்து தீபக் சாஹர் விளக்கம் அளித்த போது தன் தந்தை தான் தனக்கு முக்கியம் என்றும், தற்போது அவர் ஆபத்து கட்டத்தை கடந்து விட்டார் எனவும் கூறி இருந்தார். அதனால், அவர் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் பங்கேற்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்து இருக்கிறது.
தற்போது இந்திய டி20 அணியில் அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் முகமது சிராஜ் மட்டுமே வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களில் நடக்கும் டி20 போட்டிகளில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் அவசியம் தேவை என்பதால் இவர்கள் மூவருமே போட்டிகளில் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ மாற்று வேகப் பந்துவீச்சாளரை அணியில் சேர்க்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.