கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் பிசிசிஐ-க்கு ஒரு அதிரடி கோரிக்கையை வைத்துள்ளார். தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி கடும் விமர்சனத்தையும் முன் வைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்திய அணி 0 - 2 என தொடரை இழந்தது. அதுவும் சொந்த மண்ணில் இந்திய அணி ஒரே ஆண்டில் இர இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்துள்ளது.

இந்திய அணியின் இந்தத் தோல்வி குறித்துத் தனது 'X' (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த் ஜிண்டால், இந்திய அணியின் தேர்வு முறையையும், பயிற்சியாளர் கம்பீரின் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "சொந்த மண்ணில் இப்படியொரு அடியை வாங்கி நான் பார்த்ததே இல்லை! நமது டெஸ்ட் அணி சொந்த மண்ணில் இவ்வளவு பலவீனமாக இருந்ததாக எனக்கு நினைவில் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற நிபுணத்துவம் வாய்ந்த வீரர்களை அணியில் எடுக்காதபோது இப்படித்தான் நடக்கும்" என்று விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். "சிவப்பு பந்து கிரிக்கெட்டில் (டெஸ்ட்) நமக்கு இருக்கும் அசாத்திய திறமையை இந்த அணி பிரதிபலிக்கவில்லை. எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று தனியாக ஒரு 'ஸ்பெஷலிஸ்ட் கோச்' நியமிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று கம்பீருக்குச் 'செக்' வைக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் (டி20, ஒருநாள்) கம்பீர் சிறப்பாகச் செயல்பட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது உத்திகள் எடுபடவில்லை என்பதையே ஜிண்டால் சுட்டிக்காட்டியுள்ளார். ஐபிஎல் அணி உரிமையாளர் ஒருவர் நேரடியாக கவுதம் கம்பீரை குறி வைத்து பேசி இருப்பது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
மறுபுறம், தோல்விக்குப் பிறகு பேசிய கம்பீர், "தனிப்பட்ட முறையில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை" என்று கூறினாலும், கேப்டன் ரிஷப் பண்ட் ஆடிய விதத்தை மறைமுகமாகச் சாடினார். "நாம் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய முன்னேற வேண்டியுள்ளது. மனரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், அழுத்தத்தைக் கையாள்வதிலும் முன்னேற்றம் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, பார்வையாளர்களுக்காக விளையாடாமல் அணிக்காக விளையாட வேண்டும்" என்று ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதத்தைச் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே ரசிகர்கள் கம்பீருக்கு எதிராக முழக்கமிட்ட நிலையில், இப்போது ஐபிஎல் அணி உரிமையாளரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தனி பயிற்சியாளர் வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியிருப்பது பிசிசிஐ-க்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.