பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் ரசிகர்களால் "பாப்பு" என அழைக்கப்படும் அக்சர் பட்டேல் ஆடிய ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவர் இல்லை என்றால் இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருக்க வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் மெய் சிலிர்த்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது 34 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்து வந்தது. அப்போது பேட்டிங் ஆர்டரை மாற்றி ஐந்தாம் வரிசையில் அக்சர் பட்டேல் அனுப்பப்பட்டார். அவர் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் இல்லை என்றாலும் ஆல்ரவுண்டராக ஓரளவு ரன் சேர்ப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் எதிர்பார்ப்பை மிஞ்சி சிக்ஸர்கள் விளாசி போட்டியின் போக்கையே மாற்றி அமைத்தார். அவர் மட்டும் இல்லை என்றால் இந்திய அணி 176 ரன்கள் குவித்திருக்க வாய்ப்பே இல்லை.

விராட் கோலி 76 ரன்கள் குறித்த போதும் அவர் நிதானமாகவே ஆடினார். விக்கெட் இழக்காமல் ஆட வேண்டும் என்பதற்காக அவர் நிதானமாக ரன் சேர்த்த நிலையில் மறுபுறம் அக்சர் பட்டேல் அதிரடியாக நான்கு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து இருந்தார். 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்து இருந்தார் அக்சர். அவர் 14 வது ஓவரில் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இந்திய அணி இன்னும் கூட அதிக ஸ்கோர் எடுத்திருக்கும்.
எனினும், 176 ரன்களை வைத்து இந்திய அணி இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிகச் சிறிய வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதில் இருந்தே அக்சர் பட்டேலின் அந்த 47 ரன்கள் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளலாம். இதற்கு முந்தைய காலங்களில் இந்திய அணி பெற்ற உலகக்கோப்பை வெற்றிகளுக்கு யார் காரணம் என பலரும் இன்றும் விவாதம் செய்து வருகிறார்கள்.
2011 ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் வெற்றிக்கு காரணமாக கவுதம் கம்பீர் மற்றும் தோனியை குறிப்பிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். அதுபோல 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியின் வெற்றிக்கு காரணம் யார்? என இனி ஒரு விவாதம் நடந்தால் அக்சர் பட்டேல் பெயரை சொல்லாமல் இருக்க முடியாது. இந்த போட்டியில் அவர் 47 ரன்கள் எடுத்ததோடு பந்து வீச்சிலும் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இந்த உலகக் கோப்பையில் அக்சர் பட்டேல் 9 விக்கெட்களையும் 92 ரன்களையும் எடுத்துள்ளார். இதில் முக்கியமான இரண்டு போட்டிகளில் அவர் சேர்த்த ரன்கள் இந்திய அணியின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சேர்த்த 20 ரன்களும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் சேர்த்த 47 ரன்களும் இந்திய அணியின் இரண்டு வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தன. இதை அடுத்து இந்திய ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் இருக்கும் வரை உங்களை மறக்க மாட்டோம் என சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
மகாத்மா காந்தியை "பாப்பு" என மதிப்புக்கு உரியவர் என்ற பொருளில் அழைப்பார்கள். அதே குஜராத் மாநிலத்தில் இருந்து கிரிக்கெட் ஆடி வரும் அக்சர் பட்டேலையும் அவரைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் "பாப்பு" என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.