சண்டிகர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த ஒரு ஓவர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. ஒரே ஓவரில் தொடர்ந்து 7 வைடுகளை வீசி அர்ஷ்தீப் சிங் சொதப்பியதைப் பார்த்து, டக்-அவுட்டில் இருந்த கம்பீர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், அந்த முடிவு தவறோ என்று எண்ணும் அளவுக்கு அர்ஷ்தீப் சிங்கின் அந்த 11-வது ஓவர் அமைந்தது.

ஆட்டத்தின் 11-வது ஓவரை வீச வந்தார் அர்ஷ்தீப் சிங். ஸ்ட்ரைக்கில் குயின்டன் டி காக் இருந்தார். முதல் பந்திலேயே டி காக் ஒரு சிக்ஸர் அடித்தார். இதனால் அழுத்தம் அதிகரித்தது. அடுத்தடுத்து இரண்டு வைடுகளை வீசினார் அர்ஷ்தீப். பின்னர் ஒரு டாட் பால் வீசினாலும், அதைத் தொடர்ந்து மீண்டும் தொடர்ச்சியாக 4 வைடுகளை வீசி அதிர்ச்சி அளித்தார்.
அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 7 வைடுகள் வீசப்பட்டன. 6 பந்துகளை வீசி முடிக்க வேண்டிய ஓவருக்கு, அவர் 13 பந்துகளை வீசினார். அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்குக் கிடைத்தது.
பொதுவாகவே களத்தில் நடக்கும் தவறுகளைப் பார்த்து உணர்ச்சியைக் காட்டும் கவுதம் கம்பீர், அர்ஷ்தீப் சிங் தொடர்ந்து வைடு வீசுவதைப் பார்த்து டக்-அவுட்டில் இருந்தபடியே ஆவேசமாக சைகை காட்டினார். அவரது முகத்தில் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியாவும் களத்தில் அதிருப்தியுடன் காணப்பட்டனர்.
வர்ணனையில் இருந்த முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், அர்ஷ்தீப் சிங்கை கடுமையாக விமர்சித்தார். "இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தொடர்ந்து ஒரே லைனில் தவறாகப் பந்துவீசிக் கொண்டிருக்கக் கூடாது. இது ஒரு சர்வதேச போட்டி" என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
இப்போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 54 ரன்களை வாரி வழங்கினார். மற்றொரு முக்கிய பவுலரான பும்ராவும் 45 ரன்களைக் கொடுத்தார். இந்த பந்துவீச்சு சொதப்பலால் தென்னாப்பிரிக்கா 213 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முல்லன்பூர் மைதானத்தில் நடந்த முதல் சர்வதேச ஆடவர் போட்டி இதுவாகும். யுவராஜ் சிங் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் பெயரில் புதிய கேலரிகள் திறக்கப்பட்ட இந்த மைதானம், அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒரு கசப்பான அனுபவத்தையே தந்துள்ளது.