பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் காட்சியை நெருங்கி விட்டது. சனிக்கிழமை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு மோதும் இறுதிப்போட்டியில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் பல பரிட்சை நடத்துகிறது.
இந்த போட்டி பாரம்பரிய பார்படாஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பல்வேறு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இந்த நிலையில் இறுதிப் போட்டி நடைபெறும் பார்படாஸ் பகுதியில் புயல் ஒன்று மையம் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு இந்த புயலானது பார்படாஸ்க்கு தென்கிழக்கு 1300 மைல். தொலைவில் மையம் கொண்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது சனிக்கிழமை காலை அதிதீவிர சூறாவளியாக மாற வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தற்போது பார்படாஸ் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இந்த தீவிரப் புயலானது ஞாயிறு இரவு கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பார்படாஸ் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று ஆட்டம் நடைபெறவில்லை என்றால் நாளை மீண்டும் போட்டி ரிசர்வ் டேவில் நடத்தப்படும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை தான் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால், ஐசிசி இன்று நாளை போட்டியை முடித்து விட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. மேலும் அதி தீவிர புயல் வகையை சேர்ந்தது என்பதால் வீரர்களின் பாதுகாப்பும் ரசிகர்களின் பாதுகாப்பும் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஒருவேளை போட்டி நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டால் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும். இதனால் இன்றைய ஆட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் ஆவது வீச வேண்டும் என ஐசிசி முடிவு எடுத்து இருக்கிறது. இதற்காக போட்டி முடியும் நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம் அதிகரித்து அதற்குள் போட்டியை நடத்த ஐசிசி பிளான் செய்துள்ளது.