டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக்கஸ் காலிஸ், விராட் கோலி ரன் குவித்தால் தான் இந்தியா தொடரை வெல்லும் என அதிரடியாக கூறி இருக்கிறார்.
ரோஹித் சர்மா தலைமையிலான அணி தொடரை வெல்ல வேண்டும் என்றால் விராட் கோலி அதிக ரன் குவித்து சிறப்பான டெஸ்ட் டரை பெற வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர் முடிவடைந்த பின், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

இந்திய அணி இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. தற்போது இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்று இந்திய அணி வரலாற்றை உருவாக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் என்றாலே விராட் கோலி குறித்து பேசாமல் இருக்க முடியாது. இதற்கு முன் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த வீரர் விராட் கோலி தான். விராட் கோலி தென்னாப்பிரிக்க மண்ணில் 14 இன்னிங்ஸ்களில் களமிறங்கி, 51.36 பேட்டிங் சராசரியில் 719 ரன்கள் எடுத்து இருக்கிறார். அவர் இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்களையும் அடித்துள்ளார்.
அதன் காரணமாக விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடுவார், இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை தென்னாப்பிரிக்க மண்ணில் பெற்றுக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஜாக்கஸ் காலிஸ், விராட் கோலி ஒரு சிறந்த வீரர் என்று பாராட்டினார். மேலும், தென்னாப்பிரிக்க மண்ணில் அவர் சிறப்பாக ஆடி இருப்பதை சுட்டிக் காட்டினார். மேலும், அவர் தனது தென்னாப்பிரிக்க அனுபவத்தை இளம் வீரர்களுக்கு சொல்லிக் கொடுப்பார் என்றும் கூறினார்.
"விராட் கோலி ஒரு பெரிய வீரர், அவர் எங்கிருந்தாலும் சரி. தென்னாப்பிரிக்காவில் விளையாடி ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறார். அவர் அந்த அனுபவத்தை சக வீரர்களுக்கு, குறிப்பாக இளம் வீரர்களுக்கு சொல்லிக் கொடுப்பார், தென்னாப்பிரிக்க சூழ்நிலைகளை எவ்வாறு நிர்வகிப்பது, இங்கே போட்டியின் போது என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய யோசனைகளை அவர்களுக்கு அவரால் சொல்லிக் கொடுக்க முடியும்" என்றார் ஜாக்கஸ் காலிஸ்.
மேலும், "விராட் கோலி தென்னாப்பிரிக்காவில் ஒரு பெரிய டெஸ்ட் தொடரை ஆட வேண்டும் என விரும்புவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என நினைக்கிறேன். அவர்கள் இங்கு வெற்றிபெற வேண்டுமானால், விராட் கோலி ரன் குவித்து ஒரு நல்ல டெஸ்ட் தொடரைப் பெற்றிருக்க வேண்டும்." என்று கூறினார் ஜாக்கஸ் காலிஸ்.