கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றிலேயே இல்லாத மோசமான சாதனையை செய்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானத்தின் பிட்ச் முற்றிலும் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழந்த போதும் 153 ரன்கள் எடுத்து இருந்தது. களத்தில் ராகுல், விராட் கோலி இருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், அப்போது ராகுல் ஆட்டமிழந்தார்.
அடுத்து இந்திய அணி வரிசையாக ரன்னே சேர்க்காமல் விக்கெட்களை இழந்தது. 153 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்து 153 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. கடைசி 5 விக்கெட்களாக ஜடேஜா, பும்ரா, விராட் கோலி, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் கூடுதலாக ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தனர்.
இதன் மூலம் ஒரு டெஸ்ட் இன்னிங்க்ஸில் கடைசி ஐந்து பார்ட்னர்ஷிப்களில் குறைந்த ரன் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி செய்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் குறைவான ரன் சாதனையாக பூஜ்ஜியம் ரன்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. வேறு எந்த அணியாலும் இந்த மோசமான சாதனையை முறியடிக்க முடியாது.
முன்னதாக 1990இல் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி ஐந்து பார்ட்னர்ஷிப்களில் 3 ரன்கள் சேர்த்து இருந்தது மோசமான சாதனையாக இருந்தது. அதை முறியடித்து யாரும் முறியடிக்க முடியாத சாதனையை செய்துள்ளது இந்திய அணி.
இந்திய அணி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆட வந்தது. அந்த அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 62 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் 23 விக்கெட்கள் விழுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.