கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போலச் சரிந்த நிலையில், அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட கர்நாடக வீரர் கருண் நாயர் சூசகமாக வெளியிட்டுள்ள ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கவுகாத்தியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. பதிலுக்கு ஆடிய இந்திய அணி, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. குறிப்பாக 3-வது இடத்தில் களமிறங்கிய இளம் வீரர் சாய் சுதர்சன் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இந்தப் போட்டியில் சுப்மன் கில்லுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட சாய் சுதர்சன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. சாய் சுதர்சன் திணறுவதைப் பார்த்த ரசிகர்கள், உள்ளூர் போட்டிகளில் ரன் மழை பொழிந்து வரும் கருண் நாயரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில், கருண் நாயர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு சூசகமான பதிவை வெளியிட்டுள்ளார். "சில சூழல்களைப் பார்க்கும்போது நம் மனதிற்கு நெருக்கமாக உணருவோம்.. ஆனால் நாம் அங்கே களத்தில் இல்லை என்ற அந்த அமைதி, ஒரு விதமான வலியைத் தருகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, "அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது, அதைச் சமாளிக்கும் திறன் எனக்கு இருக்கிறது. ஆனால் நான் களத்தில் இல்லாமல் வெளியில் இருக்கிறேனே," என்ற தனது ஆதங்கத்தையும் வலியையும் அவர் வெளிப்படுத்தியிருப்பதாகக் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்திய அணிக்காக முச்சதம் அடித்த இரண்டாவது வீரரான கருண் நாயர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு பெற்றார். அதில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார் என்பதற்காக, உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். "நாங்கள் அவரிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்த்தோம்" என்று தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறியிருந்தார்.
ஆனால், அவருக்குப் பதிலாக வாய்ப்பு பெற்ற சாய் சுதர்சன் தொடர்ந்து சொதப்பி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் இந்தியா ஏ போட்டிகளில் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தற்போது இந்திய அணி இக்கட்டான நிலையில் இருப்பதால், கருண் நாயரின் இந்தப் பதிவு தேர்வுக்குழுவுக்கு விடப்பட்ட ஒரு மறைமுகச் செய்தியாகவே பார்க்கப்படுகிறது.