கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் வரலாற்றிலேயே இல்லாத சரிவை சந்தித்தது. ரன்னே எடுக்காமல் கடைசி 6 விக்கெட்களை இந்திய அணி இழந்தது.
அதற்கு ஆமை வேகத்தில் பேட்டிங் செய்த கே எல் ராகுல் ஒரு வகையில் முக்கிய காரணம் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறி இருக்கிறார். அது உண்மையும் கூட.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. போட்டி நடந்த பிட்ச்சில் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆனது. பவுன்ஸ் பந்துகளுக்கு பழக்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர்களே பேட்டிங் செய்ய திணறினர். 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனார்கள்.
அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த போதும் கடினமான சூழ்நிலை இருந்தது. ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக் அவுட் ஆன நிலையில், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் பிட்ச் குறித்து அஞ்சாமல், பவுண்டரி அடித்து ஆடினர். எப்படியும் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது என்பதை உணர்ந்து விரைவாக ரன் சேர்க்க அவர்கள் அப்படி பேட்டிங் செய்தனர்.
பேட்டிங் செய்ய மிகவும் கடினமான பிட்ச்சில் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒன்று ரன் அடிப்பது, இல்லை அவுட் ஆவது என ஆடிக் கொண்டிருந்த போது கே எல் ராகுல் கட்டை மன்னனாக மாறி 33 பந்துகளில் 8 ரன்கள் மட்டும் எடுத்தார். முதல் 20 பந்துகளில் அவர் ரன்னே எடுக்கவில்லை. முதல் 20 ஓவர்கள் வரை தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் அதிரடி பேட்டிங் அணுகுமுறையால் திணறிக் கொண்டு இருந்தது.
ஆனால், கே எல் ராகுல் வந்த உடன் ரன் குவிப்பு தடைபட்டது. அதனால், அழுத்தம் குறைந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை அடைந்து அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினர். ராகுல் 33 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து ஜடேஜா, பும்ரா, கோலி, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்து 153 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், கே எல் ராகுல் ஷாட்களை ஆடி இருக்க வேண்டும். வெறுமனே தடுப்பாட்டம் ஆடிக் கொண்டு இருந்தால் நீண்ட நேரம் களத்தில் இருக்க முடியாது. ராகுலின் ஆட்டம் தென்னாப்பிரிக்காவை போட்டியில் முன்னிலைக்கு கொண்டு வந்தது என்றார்.
இந்தியா 153 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி 62 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் முகேஷ் குமார் 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். முதல் இன்னிங்க்ஸின் போது சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.