டர்பன் : இந்திய அணிக் எதிரான டி20 தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி நீக்கப்பட்டார்.
லுங்கி என்கிடிக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்பு அவரை டி20 தொடரில் இருந்து நீக்கி உள்ளது. அவர் இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும், அதன் பின் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியாக இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியிலும் ஆட இருந்தார்.

அதன் பின் டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருப்பார் என கருதப்பட்ட நிலையில், அவர் தற்போது டெஸ்ட் தொடரை தவிர்த்து டி20 தொடர் மற்றும் பயிற்சிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதும் கடினம் என கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக டி20 அணியில் பீரான் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை தென்னாப்பிரிக்கா அணிக்காக 19 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். ஆனால், 2021 ஜூலைக்கு பின் அவர் தென்னாப்பிரிக்க டி20 அணியில் இடம் பெறவில்லை.
லுங்கி என்கிடி இல்லாத நிலையில், தென்னாப்பிரிக்க டி20 அணியில் மூன்று முதன்மை வேகப் பந்துவீச்சாளர்களும் இல்லாதா நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக மூத்த வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடாவுக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. மற்றொரு முக்கிய வேகப் பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ஜே காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் அணியில் ஏற்கனவே இடம் பெற்று இருக்கும் மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, லிசாட் வில்லியம்ஸ் போன்ற அடுத்தகட்ட வேகப் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியும் மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்டே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால், லுங்கி என்கிடி நீக்கம் ஒரு வகையில் இந்திய அணிக்கு சாதகமானது என்றாலும், தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரை எதிர்கொண்டு பேட்டிங் செய்யும் வாய்ப்பை இந்திய அணியின் இளம் வீரர்கள் இழந்துள்ளனர்.