கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சீட்டுக்கட்டு போலச் சரிந்ததை அடுத்து, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபரை கிண்டல் செய்துள்ளார். ஆனால், இந்திய ரசிகர்கள் மைக்கேல் வானுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கிரிக்கெட் உலகில் சமூக வலைதளங்களில் எப்போதும் முன்னணியில் இருப்பவர்கள் மைக்கேல் வான் மற்றும் வாசிம் ஜாஃபர். இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்பான விவாதங்களில் இவர்கள் இருவரும் அடிக்கடி ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று கவுகாத்தி டெஸ்ட் போட்டியின் முடிவை வைத்து மைக்கேல் வான் தனது வேலையைக் காட்டியுள்ளார்.

கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் 489 ரன்கள் என்ற ஸ்கோருக்கு எதிராக ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 201 ரன்களுக்குச் சுருண்டது. குறிப்பாகத் தென்னாப்பிரிக்காவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் முதுகெலும்பை உடைத்தார். ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா என யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை.
இந்திய அணி 'ஆல்-அவுட்' ஆன சிறிது நேரத்திலேயே மைக்கேல் வான் ட்விட்டரில் (X தளம்) ஒரு பதிவைப் போட்டார். அதில் வாசிம் ஜாஃபரை டேக் செய்து, "ஹாய் வாசிம் ஜாஃபர் இன்றைய நாள் எப்படிப் போகுது? இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது அவ்வளவு ஈஸி இல்ல.. இல்லையா?" என்று நக்கலாகக் குறிப்பிட்டிருந்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் இடதுகை பந்துவீச்சாளர்களிடம் திணறுவதை குத்திக்காட்டும் விதமாக இந்தப் பதிவு இருந்தது.
மைக்கேல் வானின் இந்தப் பதிவைப் பார்த்த இந்திய ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஷஸ் தொடரில் வாங்கிய அடியை நினைவுகூர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை (நவம்பர் 22) பெர்த்தில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. அதுவும் அந்தப் போட்டி வெறும் இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்தது.
இதைச் சுட்டிக்காட்டி ரசிகர்கள், "உங்க ஊர்ல ஆஷஸ் டெஸ்ட் 2 நாள்ல முடிஞ்சு போச்சு.. நீங்க இங்க வந்து பேசலாமா?", "சொந்த வீட்ல ஓட்டை.. இதுல அடுத்தவங்களை கிண்டல் பண்றீங்களா?" என்று மைக்கேல் வானை வறுத்தெடுத்து வருகின்றனர்.
மைக்கேல் வான் கிண்டல் ஒருபுறம் இருக்க, தென்னாப்பிரிக்க டெஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர் எடுத்த 48 ரன்கள் மற்றும் குல்தீப் யாதவ் சந்தித்த 134 பந்துகளும் மட்டுமே இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. 288 ரன்கள் முன்னிலை பெற்றும் தென்னாப்பிரிக்கா ஃபாலோ-ஆன் கொடுக்காமல் மீண்டும் பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது. கவுகாத்தி டெஸ்ட் தற்போது இந்தியாவின் கையை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம்.
தற்போது தென்னாப்பிரிக்கா 300 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடி வருகிறது. இந்தியா இந்தப் போட்டியில் வெல்வது மிகவும் கடினமாக மாறி உள்ளது.