கேபெர்ஹா : இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமான வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு இடையே திருமணம் நடைபெற்றது.
தற்போது தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் முகேஷ் குமாரும் இடம் பெற்றுள்ளார். டி20, ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணி என மூன்று அணிகளிலும் அவர் இடம் பெற்று இருக்கிறார்.
இந்த நிலையில், திருமணமாகி சில நாட்களே ஆன நிலையில், முகேஷ் குமார் தன் மனைவி திவ்யா சிங்குடன் தென்னாப்பிரிக்கா சென்று இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து ரசிகர்கள் அவர் ஒரே நேரத்தில் இந்திய அணிக்காக சுற்றுப்பயணம் சென்ற கையோடு, தேனிலவு பயணமாகவும் இதை மாற்றிக் கொண்டார் என கிண்டல் செய்தும், அவரது வாழ்க்கையின் புதிய தொடக்கத்துக்காக வாழ்த்தியும் வருகின்றனர்.

முன்னதாக ஆஸ்திரேலிய டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்ற முகேஷ் குமார், மூன்றாவது போட்டியின் போது அவர் அணியில் இடம் பெறவில்லை, அப்போது தான் அவர் தன் திருமணத்துக்காக சென்று இருப்பது தெரிய வந்தது.
திருமணம் முடிந்த கையோடு அணிக்கு திரும்பிய அவர் கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்றார். அதன் பின் சில நாட்களில் தென்னாப்பிரிக்க கிளம்பிய இந்திய அணியுடன் அவரும் சென்றார். திருமணம் நடந்தாலும் கூட அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் முகேஷ் குமார் பங்கேற்று வருவது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
முகேஷ் குமார் மிடில் ஓவர்களில் சிறப்பாக வீசுவதால் அவர் அணியின் அடுத்த முக்கிய வேகப் பந்துவீச்சாளராக கருதப்படுகிறார். அதனாலேயே, தென்னாப்பிரிக்க மண்ணில் டி20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
முதலில் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், முகேஷ் குமார் அதிலும் போட்டியில் களமிறங்கும் 11 வீரர்களில் ஒருவராக இடம் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.