ஜோஹன்னஸ்பெர்க் : இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில்லுக்கு, சக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தவறான ஆலோசனை கூறி அவரது விக்கெட் பறிபோக ஒரு காரணமாக இருந்தார். அந்த சம்பவத்தால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கடும் அதிருப்தி அடைந்தார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் சுப்மன் கில் - யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த போட்டியில் டக் அவுட் ஆகி இருந்ததால் இந்த முறை ரன் குவிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர்.

முதல் ஓவரில் சுப்மன் கில் இரண்டு பவுண்டரி அடித்தார். இரண்டாவது ஓவரில் ஜெய்ஸ்வால் 2 ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். அதுவரை எல்லாம் திட்டமிடப்பட்டபடி சென்றது. தென்னாப்பிரிக்க சுழற் பந்துவீச்சாளர் கேஷவ் மகாராஜ் வீசிய மூன்றாவது ஓவரில் சுப்மன் கில் காலில் பந்து பட்டது. அப்போது அம்பயர் எல்பிடபுள்யூ என அவுட் கொடுத்து விட்டார்.
சுப்மன் கில் ரிவ்யூ செய்யலாமா? வேண்டாமா என்ற குழப்பத்தில் எதிரில் இருந்த ஜெய்ஸ்வாலுடன் ரிவ்யூ கேட்பது பற்றி ஆலோசித்தார். பந்து லெக் திசையில் சென்று இருந்தால் ஸ்டம்ப்பில் படாமல் செல்ல வாய்ப்பு இருந்ததால் கில், அது குறித்து ஜெய்ஸ்வால்-இடம் கேட்டு இருக்கக் கூடும். ஆனால், ஜெய்ஸ்வால் நிச்சயமாக பந்து நேராக சென்றது எனக் கூறி விடவே சுப்மன் கில் ரிவ்யூ கேட்காமல் அவுட் தான் என ஒப்புக் கொண்டு வெளியேறினார்.
ஆனால், அதன் பின் ரீப்ளே செய்யப்பட்ட போது பந்து லெக் திசையில் செல்வதும், ஸ்டம்ப்பில் பந்து படவில்லை என்பதும் தெளிவாக தெரிந்தது. ரிவ்யூ கேட்டு இருந்தால் சுப்மன் கில் தப்பி இருப்பார். ஆனால், ஜெய்ஸ்வால் கொடுத்த தவறான ஆலோசனையால் கில் தன் விக்கெட்டை இழந்தார். பொதுவாக எதிர்முனை பேட்ஸ்மேன் அம்பயருக்கு ஓரளவு அருகே நின்று இருந்தால் மட்டுமே எல்பிடபுள்யூ குறித்து கணித்து கூற முடியும். ஆனால், இந்த சம்பவத்தின் போது ஜெய்ஸ்வால் 3 மீட்டர் தூரம் அம்பயரிடம் இருந்து தள்ளி நின்றார். அதுவும் அவர் தவறான ஆலோசனை கூற முக்கிய காரணம்.
சுப்மன் கில் ரிவ்யூ கேட்காதது, மற்றும் ரீப்ளேவில் அவர் அவுட் இல்லை என தெரிய வந்தது ஆகியவற்றை பார்த்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கடும் அதிருப்தியில் இருந்தார்.