பார்ல் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரஜத் படிதார் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
தனது 30 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆகி இருக்கும் ரஜத் படிதார் இந்த இடத்தை அடையக் காரணமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் 2022 ஆம் ஆண்டு அவர் ஆடிய ஆட்டம் தான். அப்போதே அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்ற பேச்சுக்கள் எழுந்தன.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன ரஜத் படிதார் 2022 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இடம் பெற்று 7 இன்னிங்க்ஸ்களில் 333 ரன்கள் குவித்தார். ஒரு சதம், இரண்டு அரைசதம் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 152 ஆக இருந்தது.
ஆனால், 2023 துவக்கத்தில் காயம் காரணமாக அவர் கிரிக்கெட் விளையாட முடியாத நிலையில் இருந்தார். அதனால், ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தற்போது உள்ளூர் டெஸ்ட், டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் அறிமுகம் பெற்று இருக்கிறார். அவரது உள்ளூர் ஒருநாள் போட்டி பேட்டிங் சராசரி மட்டும் மிகக் குறைவாக 36 என்ற அளவில் உள்ளது. ஆனால், டி20 சராசரி 37, டெஸ்ட் சராசரி 46 ஆக உள்ளது.
ரஜத் படிதார் 2014இல் மாநில அணியில் அறிமுகம் ஆன போது அவர் ஆஃப் ஸ்பின்னராக தான் அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டு ஒரு முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் ஒரு ஆண்டு கிரிக்கெட் ஆட முடியாமல் இருந்த அவர் மீண்டு வந்து பேட்ஸ்மேன் ஆகி 2021இல் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இடம் பெற்றார்.
அதன் பின் 2022 ஐபிஎல் தொடரில் ஆடிய ஆட்டம் காரணமாக தற்போது இந்திய ஒருநாள் அணியில் தனது 30 வயதில் வாய்ப்பு பெற்று இருக்கிறார். இவர் 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் போது மாற்று பேட்ஸ்மேனாக இடம் பெற சிறிய வாய்ப்பு உள்ளது.