கேப் டவுன் : இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் அதற்கு ஒரு வகையில் ஆல் - ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தான் முக்கிய காரணம் என ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்தது.

எப்படியும் இந்திய அணி 200 - 250 ரன்களை எட்டி விடும் என ரசிகர்கள் நம்பிய நிலையில், ராகுல் ஆட்டமிழந்தார். அப்போது களத்தில் விராட் கோலி இருந்ததால், அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா, அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறான விஷயம் நடந்தது.
வந்த உடன் இரண்டாவது பந்தை தடுத்து ஆடாமல், ரன் அடிக்க ஆசைப்பட்ட ஜடேஜா முன்னே வந்து அடிக்க முயன்றார். அப்போது பந்து பவுன்ஸ் ஆனதால் பேட்டில் பட்டு கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து பும்ரா, சிராஜ், முகேஷ் குமார் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் மட்டுமே பேட்டிங் ஆட வேண்டும் என்ற நிலையில் ஜடேஜாவின் அணுகுமுறை தவறாக அமைந்தது.
நினைத்தது போலவே அடுத்து வந்த பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். ஜடேஜா ஆட்டமிழந்த உடன் பந்துவீச்சாளர்களால் கடினமான ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய முடியாது என்பதால் கோலி அதிரடி ஆட்டம் ஆட முயன்று தன் விக்கெட்டை பறிகொடுத்தார். இதை அடுத்து இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.
இத்தனைக்கும் இந்தப் போட்டியில் பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அஸ்வினை நீக்கி விட்டு, ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், பேட்டிங்கில் ஜடேஜா டக் அவுட் ஆனதோடு, அணியின் சரிவுக்கும் காரணமாக அமைந்தார்.
இந்திய அணி 153 ரன்களுக்கு முதல் இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்க அணியை விட கூடுதலாக 98 ரன்கள் மட்டுமே சேர்த்து இந்திய அணி ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை அளித்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 62 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து இருந்தது.