மும்பை : இந்திய அணியில் ரிங்கு சிங்கை தேர்வு செய்து ஆட வைக்க என்ன காரணம் என்பது பற்றி சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டி ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
ரிங்கு சிங்கை ஒரு ஜாம்பவான் வீரர் போல அணியில் செயல்பட வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் எதிர்பார்ப்பதாக அவர் கூறி இருக்கிறார். அந்த ஜாம்பவான் வீரர் பலரும் நினைப்பது போல தோனி அல்ல. மாறாக, யுவராஜ் சிங் போல ஆட வேண்டும் என இந்திய நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
2007 டி20 உலகக்கோப்பை அணியில் பின் வரிசையில் ஃபினிஷராக எப்படி செயல்பட்டாரோ அதே போல ரிங்கு சிங் தற்போது இந்திய அணியில் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர் மீது இருப்பதாக கவாஸ்கர் கூறி இருக்கிறார். 2007 டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் ஆடிய இரண்டு இன்னிங்க்ஸ் மறக்க முடியாதவை. அந்த இரண்டு இன்னிங்க்ஸ் காரணமாகவே இந்திய அணி இறுதிக்கு முன்னேறியது.

2007 டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் தான் அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், யுவராஜ் சிங் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து 12 பந்துகளில் அரைசதம் கடந்து இருந்தார். அடுத்து அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 70 ரன்கள் குவித்தார். இந்தியா அந்த ஆட்டத்தை வென்று இறுதிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், ரிங்கு சிங்கையும் அது போன்ற அதிரடி ஆட்டம் ஆடவே இந்திய அணி தேர்வு செய்து உள்ளதாகவும், யுவராஜ் சிங் ஆடியதில் ரிங்கு சிங் கொஞ்சம் ஆடினால் கூட அவர் தனக்கு அளிக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்ததாக கருதலாம் எனக் கூறி இருக்கிறார் கவாஸ்கர்.
இது பற்றி கவாஸ்கர் பேசிய போது, "திறமை - இது அனைவருக்கும் கொடுக்கப்படவில்லை. நீங்கள் விளையாட்டை விரும்பலாம். நீங்கள் நாள் முழுவதும் விளையாடலாம், ஆனால் சில நேரங்களில் உங்களுக்கு திறமை இல்லை என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் ரிங்கு சிங் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது, அதைத்தான் அவர் செய்து முடித்து இருக்கிறார். கடந்த 2-3 ஆண்டுகளாக, ஐபிஎல்-இல், அவர் பல அணிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று வந்தார், இறுதியாக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் கைப்பற்றிய விதம் அற்புதமாக இருந்தது" என்று கூறினார்.
மேலும், "இப்போது ரிங்கு சிங் இந்திய அணியின் ஒரு பகுதியாக உள்ளார். இப்போது அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இப்போது அவர் மற்றொரு யுவராஜ் சிங்காக இருக்க வேண்டும் என்று அணியில் எதிர்பார்க்கிறார்கள். ரிங்கு சிங் - யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட்டுக்காக யுவராஜ் செய்ததில் ஒரு பகுதியையாவது அவரால் செய்ய முடிந்தால், அவர் சிறப்பாக செயல்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்" என்று கவாஸ்கர் கூறினார்.