கேப் டவுன் : இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், டி20 அணியில் ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா இடையே யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்திய டி20 அணியில் ஃபினிஷர் என்ற இடத்தில் ஹர்திக் பாண்டியா மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக இடம் பெற்று வந்தார். ஆனால், அவர் அடிக்கடி காயத்தில் சிக்கும் நிலையில் அவருக்கு மாற்றாக வந்தவர் தான் ரிங்கு சிங். பாண்டியா போல ஆல் - ரவுண்டர் இல்லை என்றாலும் நம்பகமான ஃபினிஷர் என்ற பெயரை சில போட்டிகளிலேயே பெற்றுள்ளார்.

ரிங்கு சிங்கின் பலமே அவரது ஸ்ட்ரைக் ரேட் தான். கடைசி 2 ஓவர்களில் மட்டும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 200க்கு மேல் தான் இருக்கும். இந்த நிலையில், அவருக்கு இணையான மற்றொரு அதிரடி பேட்ஸ்மேனும் அணியில் புதிதாக இணைந்துள்ளார். அவர் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா.
ஐபிஎல் தொடரில் சில அதிரடி இன்னிங்ஸால் அனைவரையும் கவர்ந்த ஜிதேஷ் சர்மா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் சில வீரர்கள் ஓய்வில் இருந்ததால் ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா இருவரும் ஒன்றாக ஒரே அணியல் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்தனர்.
ஆனால், தென்னாப்பிரிக்க டி20 தொடரின் போது அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் என இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களில் யாரை ஆட வைப்பது என்ற குழப்பம் உள்ளது. பிசிசிஐ மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக இஷான் கிஷனை அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வரும் நிலையில் அவருக்கே அணியில் வாய்ப்பு கிடைக்கும்.
இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் என்பதால், ஜிதேஷ் சர்மா வெறும் பேட்ஸ்மேன் என்ற அடையாளத்துடன் மட்டுமே அணியில் இடம் பெற போராட வேண்டிய நிலை ஏற்படும். இந்திய பேட்டிங் வரிசையில் சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (அல்லது ருதுராஜ் கெய்க்வாட்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் இடம் பெறும் நிலையில் ஆறாவதாக
ஃபினிஷராக ரிங்கு சிங் இடம் பெறுவார்.
ஜிதேஷ் சர்மா அணியில் இடம் பெற வேண்டும் என்றால் ரிங்கு சிங்கிற்கு மாற்று வீரராக தான் வர வேண்டும். இந்திய அணியில் அந்த மாற்றம் நடக்குமா? அது மிகவும் கடினமான முடிவு. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரிங்கு சிங்கையே நம்பி அணியில் இடம் அளிப்பார். ஜிதேஷ் சர்மாவை மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே அவர் வைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.