மும்பை : தென்னாப்பிரிக்க மண்ணில் ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில் அவருக்கு அரிய சாதனை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றது கிடையாது. இதுவரை மொத்தமே நான்கு டெஸ்ட் போட்டிகளில் தான் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

எந்த கேப்டனாலும் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாத நிலையில், ரோஹித் சர்மா கேப்டனாக அதை செய்தால் இந்திய கேப்டன்கள் வரலாற்றில் தனி இடத்தை பெறுவார். ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன்சியில் இதுவரை இந்திய அணி பெரிய தொடர் வெற்றியை பெற்றதில்லை. அந்தக் குறையை போக்க தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் அரிய வாய்ப்பாகும்.
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்த வீரர்கள் இடம் பெற்று இருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவால் இந்த சாதனையை நிகழ்த்த முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன் 2006இல் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி முதன்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் டெஸ்ட் போட்டி வெற்றியை பதிவு செய்தது. அதன் பின் 2010இல் தோனி தலைமையில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.
இதுவரை உள்ள இந்திய டெஸ்ட் அணி கேப்டன்களில் சிறந்த கேப்டனாக முத்திரை பதித்த விராட் கோலி இரண்டு போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். அவராலும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில், ரோஹித் சர்மா அந்த சாதனையை செய்தால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனி இடத்தை பிடிக்கலாம்.
அதற்கு சாதகமான அணியும் இப்போது ரோஹித் சர்மாவிடம் உள்ளது. பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என சமீபத்தில் நல்ல
ஃபார்மில் இருக்கும் வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா, சிராஜ், பும்ரா, முகேஷ் குமார் உள்ளனர். அவர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே, ரோஹித் சர்மா கேப்டன்சியில் இந்தியா தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது.