மும்பை : 2001ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் நடைபெற்ற சம்பவங்கள் இந்தியாவையே கொந்தளிக்க வைத்தன.
அப்போது உலகின் நம்பர் பேட்ஸ்மேனாக இருந்த சச்சின் டெண்டுல்கர் மீது பந்தை சேதப்படுத்தியதாக புகார் கூறி அவர் புகழை களங்கப்படுத்த முயற்சி நடந்தது. சச்சின், சவுரவ் கங்குலி, சேவாக் உள்ளிட்ட ஆறு இந்தியவீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
அந்த சம்பவம் இந்தியாவின் கடைகோடி வரை அனைவரையும் கொதிக்க வைத்தது. இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பெரும் பூகம்பமாக வெடித்தது. இது எல்லாவற்றுக்கும் காரணம் ஒரே ஒரு நபர், மேட்ச் ரெப்ரீயாக இருந்த மைக் டென்னஸ்.

2001ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியை இந்தியா டிரா செய்தது.
ஆனால், இந்தப் போட்டியின் போது சச்சின் டெண்டுல்கர் பந்தை சேதப்படுத்த முயன்றதாக மேட்ச் ரெப்ரீ மைக் டென்னஸ் குற்றம் சுமத்தினார். சச்சின் பந்தில் உள்ள அழுக்கை துடைத்ததாக விளக்கம் அளித்தார். ஆனால், சச்சின் கையில் பந்தை வைத்து தேய்த்தார் என்ற ஒரே விஷயத்தை வைத்துக் கொண்டு அவர் பந்தை சேதப்படுத்தினார் என டென்னஸ் குற்றம் சுமத்தினார்.
மேலும் வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங், ஷிவ் சுந்தர் தாஸ், தீப்தாஸ் குப்தா ஆகியோர் தேவையின்றி அதிகமாக அவுட் கேட்டு முறையிட்டனர் என்றும், கேப்டன் சவுரவ் கங்குலி தன் வீரர்களை கட்டுப்படுத்த தவறினார் எனவும் கூறி மொத்தமாக ஆறு இந்திய வீரர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு போட்டியில் ஆட தடை விதித்தார்.
இது குறித்து மைக் டென்னஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய போது இந்திய ஊடகத்தினர் அவரை முற்றுகையிட்டு தென்னாப்பிரிக்க வீரர் ஷான் பொல்லாக் கூட அதிக முறை விக்கெட் கேட்டு முறையிட்டார். அவருக்கு ஏன் தடை விதிக்கவில்லை என கேள்வி எழுப்பினர். சச்சின் பந்தை சேதம் செய்தார் என்றால் பந்து சேதம் அடைந்ததை நிரூபிக்க முடியுமா? என கேட்டனர். அதற்கும் அவர் பதில் சொல்லவில்லை.
இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் பெரும் விவாதம் நடந்தது. முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் ஆன மைக் டென்னஸ் நிறவெறி பிடித்து இப்படி செய்து இருக்கிறார் என ஊடகங்கள் எழுதின. இதை அடுத்து பிசிசிஐ, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்பிடம் மைக் டென்னஸ் மேட்ச் ரெப்ரீயாக இருந்தால் இந்தியா அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆடாது என கூறி விட்டது.
மேலும், தடையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பிசிசிஐ, ஐசிசியிடம் முறையிட்டது. இந்த நிலையில், இந்திய அணியை பகைத்துக் கொண்டால் ஏற்படப் போகும் பின்விளைவுகள் மற்றும் அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெறாமல் போனால் பல சிக்கல்கள் வரும் என்பதால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு மைக் டென்னஸ் இல்லாமல் மூன்றாவது போட்டியை நடத்தியது.
ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தங்களின் மேட்ச் ரெப்ரீ இல்லாமல் நடக்கும் போட்டியை சர்வதேச போட்டியாக அங்கீகரிக்க முடியாது என கூறியது. அதனால், அந்த டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகள் கொண்டதாக மாற்றப்பட்டு முதல் டெஸ்ட்டில் வென்ற தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் மைக் டென்னஸ் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே மேட்ச் ரெப்ரீயாக செயல்பட்டார். பின்னர் உடல்நலமின்றி ஐசிசி-யில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த சம்பவத்துக்கு பின் தான் பிசிசிஐ கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என முடிவு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் தன் ஆதிக்கத்தை துவக்கியது.