ஜோஹன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை உடைத்து எறிந்து இருக்கிறார். அவர் இந்த ஆண்டு மட்டுமே மூன்று டி20 சதங்களை அடித்து இருக்கிறார். அவரது கிரிக்கெட் கேரியரில் அடிக்கப்பட்ட மூன்று சதங்களும் 2024 ஆம் ஆண்டில் மட்டுமே அடிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சதம் அடித்த வீரராக சஞ்சு சாம்சன் மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இதற்கு முன் நான்கு வீரர்கள் ஒரே ஆண்டில் இரண்டு சர்வதேச டி20 சதங்களை அடித்து இருந்தனர். கோலின் மன்றோ, ஃபில் சால்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய நால்வர் ஒரே ஆண்டில் இரண்டு சதங்களை அடித்து இருந்தனர்.

ஐந்தாவதாக திலக் வர்மாவும் தென்னாப்பிரிக்க டி20 தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் சதம் அடித்து, ஒரே ஆண்டில் இரண்டு சதங்கள் அடித்திருந்தார். அவர்கள் அனைவரையும் முந்தி இருக்கும் சஞ்சு சம்சன் ஒரே ஆண்டில் மூன்று சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.
மேலும், ஒரே டி20 தொடரில் இரண்டு சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் பெற்றார். முன்னதாக இங்கிலாந்து அணியின் ஃபில் சால்ட் ஒரே தொடரில் இரண்டு சதங்களை அடித்திருந்தார். சஞ்சு சாம்சனுக்கு பின் திலக் வர்மா மூன்றாவதாக இந்த சாதனையை செய்து இருக்கிறார். சஞ்சு சாம்சன் இந்த ஆண்டு மேலும் ஒரு சாதனையை செய்து இருக்கிறார்.
ஆனால், அது படுமோசமான டி20 சாதனை ஆகும். 2024 ஆம் ஆண்டில் சஞ்சு சாம்சன் ஐந்து முறை சர்வதேச டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முழு நேர உறுப்பினராக இருக்கும் அணிகளை சேர்ந்த வீரர்களில் இதுவே அதிகமாகும். இந்த மோசமான சாதனையால் "அடித்தால் சதம், இல்லையேல் டக் அவுட்" என்ற கொள்கையுடன் சஞ்சு சாம்சன் ஆடி வருகிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. .
இந்த ஆண்டு சஞ்சு சாம்சன் மேலும் பல சாதனைகளையும் படைத்து இருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர், வெளிநாட்டில் டி20 சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர், அதிக முறை டக் அவுட் ஆன இந்திய விக்கெட் கீப்பர் என பல்வேறு சாதனைகளை அவர் செய்து இருக்கிறார்.