கொல்கத்தா : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் அரைசதம் அடித்தாலும் முதல் சில ஓவர்கள் அவர் பேட்டிங் செய்வது பெரும் போராட்டமாக இருந்தது.
அவரை விராட் கோலி தட்டிக் கொடுத்து ஊக்கம் அளித்து ரன் குவிக்க காரணமாக இருந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பந்துகளை சந்திப்பதில் சிக்கல் உள்ளது கடந்த சில உலகக்கோப்பை போட்டிகளில் அவர் ஆடிய போது தெரிந்தது. அதை பயன்படுத்திக் கொண்ட மற்ற அணிகளின் வேகப் பந்துவீச்சாளர்கள் அவருக்கு தொடர்ந்து ஷார்ட் பந்துகளை வீசி அவர் விக்கெட்டை கைப்பற்றி வந்தனர்.

இந்த நிலையில், அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஷார்ட் பந்துகளை ஆடாமல் விட்டு சமாளித்து அரைசதம் அடித்தார். அதாவது அப்போதும் அவருக்கு ஷார்ட் பந்துகளில் பிரச்சனை இருந்தது. ஆனால், அவர் அந்த பந்துகளை தவிர்த்து சமாளித்து அரைசதம் அடித்து இருந்தார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா போட்டியிலும் ஸ்ரேயோஸ் ஐயருக்கு ஷார்ட் பந்துகளை வீசியது தென்னாப்பிரிக்கா வேகப் பந்துவீச்சு கூட்டணி. அதனால் ஸ்ரேயாஸ் முதல் சில ஓவர்களில் ரன் எடுக்கத் தடுமாறினார். சில சமயம் ஷார்ட் பந்துகள் வந்தாலே அவர் கண்களை மூடிக் கொண்டு பந்தை அடித்தார். பல ஷார்ட் பந்துகளை அவர் ஆடவே இல்லை.
இந்த நிலையில் அவர் 49 பந்துகளை சந்தித்து 27 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவர் ஸ்பின் ஓவர்களில் கூட தன்னம்பிக்கை இன்றி ஆடிக் கொண்டு இருந்தார். அப்போது களத்தில் அவருடன் கூட்டணி அமைத்து ஆடிய விராட் கோலி அவருக்கு ஆலோசனைகள் கூறி ஊக்கப்படுத்தி ரன் குவிக்க வைத்தார்.
அதன் பின் வேகம் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் 87 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்து சென்றதும் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி வீசிய பந்தில் தான். விராட் கோலி அவரைத் தட்டிக் கொடுத்து ஆட வைத்தது நெகிழ வைக்கும் சம்பவமாக இருந்தது.