கேப் டவுன் : இந்திய டெஸ்ட் அணியில் சுப்மன் கில்லுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. அடுத்த விராட் கோலி என பலராலும் பாராட்டுக்களை அள்ளி வந்த சுப்மன் கில் டெஸ்ட் அணியில் படுமோசமான நிலையில் இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 31ஆக உள்ளது. இது ஆல் - ரவுண்டர் ஜடேஜாவின் சராசரியை விட குறைவானது. 2022-23இல் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பின் சுப்மன் கில் டெஸ்ட் பேட்டிங் சராசரியை கணக்கிட்டு பார்த்தால், அஸ்வினின் பேட்டிங் சராசரியை விட கீழே உள்ளது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் 2 மற்றும் 26 ரன்கள் தான் எடுத்தார். சுப்மன் கில்லின் பிரச்சனையே அவரால் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ரன் குவிக்க முடியவில்லை என்பது தான்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவர் ரன் குவிக்கவில்லை என்றால் இந்திய டெஸ்ட் அணியில் தன் இடத்தை இழப்பது உறுதி என கூறப்படுகிறது. இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
அதைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு முழுவதும் டி20 உலகக்கோப்பை தொடரை தவிர்த்து மீதமுள்ள நாட்களில் அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது. எனவே, இந்திய டெஸ்ட் அணியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
சுப்மன் கில் தென்னாப்பிரிக்கா தொடரில் சரியாக ரன் குவிக்கவில்லை என்றால், அவர் தற்போது களமிறங்கி வரும் மூன்றாவது வரிசையில் ஏற்கனவே பேட்டிங் ஆடி வந்த அனுபவ வீரர் புஜாராவை இந்திய அணி மீண்டும் ஆட வைக்கக் கூடும் என கூறப்படுகிறது. வேறு வீரரை ஆட வைத்துப் பார்க்க இந்திய அணிக்கு போதிய காலம் இல்லை. இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் முழு பலத்துடன் இந்திய அணி ஆடியாக வேண்டுமென்பதால் சுப்மன் கில்லுக்கு கேப் டவுன் டெஸ்ட் போட்டி கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.