கேப் டவுன் : தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட இருக்கும் தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனால் கூட அது தென்னாப்பிரிக்கா தோற்பதற்கு சமம் எனக் கூறி இருக்கிறார். ஏற்கனவே, இந்திய அணி முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த நிலையில், இவரது பேச்சு இரண்டாவது டெஸ்டில் இந்திய அணிக்கு என்ன நடக்குமோ என்ற பீதியை கிளப்புவதை போல உள்ளது.
மேலும், தான் உலகக்கோப்பை வென்றதில்லை. தனக்கு டெஸ்ட் தொடர் வெற்றியே உலகக்கோப்பை வெற்றி. எனவே, இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை உலகக்கோப்பை போல கருதி வெற்றிக்கு போராடுவேன் எனக் கூறி இருக்கிறார் டீன் எல்கர்.

தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை 1 - 1 என சமன் செய்யலாம். இந்த சூழ்நிலையில் தான் தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் அதிரடியாக தென்னாப்பிரிக்கா இதை உலகக்கோப்பை வெற்றியாக கருதி இறுதி வரை போராடும் என பேசி இருக்கிறார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டீன் எல்கர் பேசுகையில், "நான் வெற்றி பெறுவதற்காகவே விளையாடுகிறேன். புள்ளி விவரங்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. போட்டியின் வெற்றிகள், தொடர் வெற்றிகள் ஆகியவை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதைத் தான் நமது அணியுடன் நினைவுகூர்ந்து பார்க்க முடியும். அதிலும் டெஸ்ட் வெற்றிகள் ஒப்பிட முடியாதது. வேண்டுமானால் உலகக்கோப்பையுடன் அதை ஒப்பிடலாம். எனக்கு உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இது தான் எனது உலகக்கோப்பை. இதை வெல்ல நான் குறி வைப்பேன்" என்றார்.
மேலும், "நல்ல வேளையாக இந்த தொடரை சமன் செய்து விட்டதால் தோல்வி அடைய முடியாத நிலையில் இருக்கிறோம். ஆனால், இந்த போட்டி டிரா ஆனாலும் அது தோல்விக்கு சமமானது தான். இது எங்களுக்கு மிகப் பெரிய டெஸ்ட் தொடர். இந்த ஆண்டின் முக்கியமான டெஸ்ட் போட்டி. புத்தாண்டில் முதல் போட்டியில் வலுவான அணியை எதிர்கொள்கிறோம். இதை விட பெரிதாக, சிறப்பான போட்டியில் ஆட முடியாது." என்றார் டீன் எல்கர்.
இந்திய பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்காவின் பவுன்ஸ் பந்துகளை எதிர்கொள்ள திணறி வருகின்றனர். இந்திய பந்துவீச்சாளர்களில் பும்ரா தவிர யாராலும் தென்னாப்பிரிக்க வீரர்களை அச்சுறுத்த முடியவில்லை. இந்த நிலையில், இரண்டாவது போட்டி உலகக்கோப்பைக்கு சமம் என டீன் எல்கர் கூறி இருப்பதால் இந்திய அணி தனது 200 சதவீத திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். செய்யுமா ரோஹித் படை?