டர்பன் : தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தன் முதல் வெற்றி பெற காரணம் சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற வீரர்கள் இல்லை, ஸ்ரீசாந்த் தான் என்று சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். ஆனால், அதுதான் உண்மை.
2006 டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. வாசிம் ஜாபர், வீரேந்தர் சேவாக், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மன், சவுரவ் கங்குலி, தோனி என நீண்ட பேட்டிங் வரிசையுடன் களமிறங்கியது இந்திய அணி.

வெறும் நான்கே நன்கு பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு தில்லாக ஆடியது இந்திய அணி. அதிலும் ஒருவர் விக்ரம் சிங் என்ற புதுமுக பந்துவீச்சாளர். சேவாக், சச்சின், கங்குலி ஆகியோரை பகுதி நேர பந்துவீச்சாளர்களாக பந்து வீச வைத்து சமாளிக்கலாம் என்ற குருட்டு நம்பிக்கையில் டிராவிட் இருந்தது தான் இப்படி ஒரு முடிவை எடுக்க காரணம்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 249 ரன்கள் எடுத்தது. அணியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பி இருந்த கங்குலி அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். சச்சின் 44 ரன்கள் சேர்த்திருந்தார்.
அடுத்து பந்துவீச்சில் அந்த தரமான சம்பவம் நடந்தது. வெறும் நான்கு பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு இந்திய அணி 25.1 ஓவரில் தென்னாப்பிரிக்காவை 84 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தது. அதற்கு முக்கிய காரணம் ஸ்ரீசாந்த். அவர் 5 விக்கெட்களை அள்ளினார். கிரீம் ஸ்மித், ஹாஷிம் அம்லா, ஜாக்கஸ் காலிஸ், மார்க் பவுச்சர், ஷான் பொல்லாக் என முக்கிய விக்கெட்களை எல்லாம் அவர் வீழ்த்தினார்.
அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய போது 250 ரன்களை கடந்து தென்னாப்பிரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருந்த நிலையில், ஸ்ரீசாந்த் 10வது பேட்ஸ்மேனாக களத்துக்கு வந்தார். அப்போது தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரே நெல் அவரை வம்பிழுக்கும் வகையில், "உன்னால் ரன் எடுக்கவே முடியாது. அதற்கு லாயக்கே இல்லை" எனக் கூறி இருக்கிறார். அதனால் கோபமடைந்த ஸ்ரீசாந்த், சிக்ஸ் அடித்து தெறிக்க விட்டு பேட்டை சுற்றிக் காட்டி அவருக்கு பதிலடி கொடுத்தார்.
அதன் பின் இரண்டாவது இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 278 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது. ஸ்ரீசாந்த் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்தியா 123 ரங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா மண்ணில் தன் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. 8 விக்கெட்கள் வீழ்த்திய ஸ்ரீசாந்த் ஆட்டநாயகன் விருதை வென்றார்.