மும்பை : டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு தனித்துவமான யுக்திகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக பேட்டிங்கை விட பந்து வீச்சில் ஒவ்வொரு அணியும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது டி20 உலக கோப்பை இன்னும் ஆறு மாதத்தில் வர இருக்கிறது. இதில் இரண்டு மாதத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பிஸியாக இருப்பார்கள். இதனால் வெறும் இரண்டு மாதம் மட்டும்தான் இந்திய அணி t20 போட்டியில் தங்களது அணியை தயார் செய்ய நேரம் இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங்கில் எந்த பிரச்சனையும் தற்போது தெரியவில்லை. ஆனால் முக்கிய பிரச்சினையை பந்துவீச்சு தான் இருக்கிறது. டி20 உலக கோப்பையில் பும்ரா, சமி போன்ற வீரர்கள் விளையாடினால் அதில் சிக்கல் இருக்காது. ஒருவேளை சீனியர் வீரர்கள் நாங்கள் விளையாடவில்லை என முடிவெடுத்து விட்டால் இந்தியா அடுத்தகட்ட பிளானை நோக்கி செல்ல வேண்டும்.
இதற்காகத்தான் தற்போது தென்னாப்பிரிக்க தொடரை இந்திய அணி மிகவும் முக்கியமாக கருதுகிறது. இந்த போட்டியில் பும்ரா, சமி ஆகிய இருவருமே இல்லை. ஆனால் சிராஜ், ஆர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார், தீபக்சாகர் என நான்கு வீரர்கள் இருக்கிறார்கள். இதில் இந்திய அணி தீபக்சாகர், சிராஜ் ஆகிய இருவரையும் ஆட்டத்தின் முதல் பகுதியில் பந்து வீச பயன்படுத்தி கொள்ளும்.
தற்போது பிரச்சினையே கடைசி கட்ட ஓவர்களை யார் வீசப் போகிறார்கள் என்பதுதான். இதில் முகேஷ் குமார் மற்றும் ஆர்ஸ்தீப் சிங் ஆகிய இருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் இருவருமே நல்ல திறமையான வீரர்களாக அறியப்பட்டாலும் தொடர்ந்து ஒரே மாதிரி பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்த தடுமாறி வருகிறார்கள்.
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இருவருமே பெரிய அளவில் சொதப்பாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்திருக்கும். இந்த இரண்டு வீரர்களில் யாரேனும் ஒருவராவது தங்களுடைய திறமையை தென்ஆப்பிரிக்கா தொடரில் நிரூபித்தால் மட்டுமே டி20 உலக கோப்பைக்கு இந்தியா தங்களை சிறப்பான முறையில் தயார்படுத்திக் கொள்ளும் .